பேய்
என்பது பொய்
அறிவியல் பரப்பில்
பேய்
உலவுவது மெய்
மனப்பரப்பில்
மனவிழி
பேதலிக்கும் போது
வந்து
வசப்படுத்தும்
மாயக் காட்சிகளும்
திரிபுக் காட்சிகளும்
சிவகாசி நாட்காட்டியில்
சிரிக்கும் முருகன்
வாய்திறந்து பேசுவதைக்
காதுகுளிர்ந்து கேட்பார் உண்டு
மனம் எனும்
மாயப்பேயின் பின்னணி ஒலிபரப்பால்
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்
இறந்துபோன
இராஜராஜசோழன்
எதிர்வீட்டு மாடியில் நின்று
எம்ஜிஆரோடு கத்தி சண்டை போடுவதைக்
கண்டு
கைதட்டுவார் உண்டு
மனப்பேய் நடத்தும்
மாய நிகழ்வலை வரிசையில்
மைக்கும் இல்லை
மக்களும் இல்லை
சீறிச் சினந்து
சிறப்புரை ஆற்றுவார் உண்டு
மனப்பேய் நிகழ்த்தும்
தெருக்கூத்தில்
மானத்தைப் போலவே
ஆடைகளையும்
அவிழ்த்தெறிந்து
ராஜ வீதியில்
ராணுவ நடை போடுவார் உண்டு
உளப்பேயின்
உத்தரவுக்கு அடங்கி
மனநோயின்
விசித்திரங்கள்
விபரீதங்கள்
ஒவ்வொருவருக்குள்ளும்
உண்டு
கைதவறினால் உடைந்துவிடும்
கண்ணாடிதான்
மனம்
உடையாமல் பார்த்துக்கொள்
உள்ளத்தைக் காத்துக்கொள்
மனதைத்
தாயாக்கி விட்டால்
உன் கைப்பிடித்துச் செல்வாள்
உலகை ஆளச் செய்வாள்
மனதைப்
பேயாக்கிவிட்டால்
உன் இரவுக்குக் கோரப்பல் முளைக்கும்
உன் பகலுக்கு விஷநகங்கள் நீளும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.