மண்ணுக்குள் மறைவாக இருந்த போதும்
மரமாக வளரவைக்கும் விதையைப் போல
கண்ணுக்குத் தெரியாத மனம்தான் ஞாலக்
கண்களுக்கு நம்முகத்தைத் தெரிய வைக்கும்
விண்மீது சுற்றிவந்து இருளைப் போக்கி
வியனுலகை ஆட்டிவைக்கும் கதிரைப் போல
மண்மீது நம்வாழ்வை ஆட்டு வித்து
மகிழ்ச்சிதுன்பம் தருவதுவும் மனமே தானே !
கண்ணில்லா எலன்கில்லர் கல்வி கற்றார்
காதில்லாப் பீத்தோவன் இசையில் வென்றார்
நொண்டியான டாம்விட்கர் இமயம் தொட்டார்
நொந்திவர்கள் மூலையிலே அமர்ந்தி டாமல்
எண்ணத்தில் தளர்ச்சியின்றி முயற்சி யோடே
ஏறியின்று உலகமெல்லாம் அறியு மாறு
மண்மீதில் சாதனைகள் படைப்ப தற்கு
மாத்துணிவை அளித்ததெல்லாம் மனமே தானே !
வாயடக்கி உள்வைக்கும் சொற்கள் நம்மை
வளையாமல் தலைநிமிரச் செய்தல் போல
தூயதாக மனந்தன்னை வைத்துக் கொண்டால்
துல்லியமாய் அதையடக்கக் கற்றுக் கொண்டால்
மாயப்பேய் மாயப்பேய் என்றே நம்மின்
மனம்பற்றிச் சொன்னவச்சம் விலகிப் போக
ஆயகலை அனைத்திலுமே வெற்றி கொள்வோம்
அரும்வாழ்வாய் நம்வாழ்வும் ஒளிரும் நன்றாய் !