மனம்எனும் மாயப்பேய்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
மண்ணுக்குள்   மறைவாக   இருந்த   போதும்
            மரமாக   வளரவைக்கும்   விதையைப்   போல
கண்ணுக்குத்   தெரியாத   மனம்தான்   ஞாலக்
            கண்களுக்கு   நம்முகத்தைத்   தெரிய   வைக்கும்
விண்மீது   சுற்றிவந்து   இருளைப்  போக்கி
            வியனுலகை   ஆட்டிவைக்கும்   கதிரைப்   போல
மண்மீது   நம்வாழ்வை   ஆட்டு   வித்து
            மகிழ்ச்சிதுன்பம்   தருவதுவும்   மனமே   தானே !

கண்ணில்லா   எலன்கில்லர்   கல்வி  கற்றார்
            காதில்லாப்  பீத்தோவன்   இசையில்   வென்றார்
நொண்டியான   டாம்விட்கர்   இமயம்   தொட்டார்
            நொந்திவர்கள்    மூலையிலே   அமர்ந்தி   டாமல்
எண்ணத்தில்   தளர்ச்சியின்றி   முயற்சி  யோடே
            ஏறியின்று   உலகமெல்லாம்   அறியு   மாறு
மண்மீதில்   சாதனைகள்   படைப்ப   தற்கு
            மாத்துணிவை   அளித்ததெல்லாம்   மனமே   தானே !

வாயடக்கி   உள்வைக்கும்   சொற்கள்   நம்மை
            வளையாமல்   தலைநிமிரச்   செய்தல்   போல
தூயதாக   மனந்தன்னை    வைத்துக்   கொண்டால்
            துல்லியமாய்   அதையடக்கக்   கற்றுக்   கொண்டால்
மாயப்பேய்   மாயப்பேய்   என்றே   நம்மின்
            மனம்பற்றிச்   சொன்னவச்சம்   விலகிப்   போக
ஆயகலை    அனைத்திலுமே    வெற்றி   கொள்வோம்
            அரும்வாழ்வாய்   நம்வாழ்வும்   ஒளிரும்   நன்றாய் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com