நெல்லுக்கிறைத்த நீர்
வீணாகப் போகாது
வாய்க்காலில் பாயும்போது
மண்ணைப் பதப்படுத்தும்
சிறுசிறு உயிர்களின்
தாகத்தை தீர்த்துவைக்கும்
நெல்லை விளைவித்து
விவசாயியை மகிழ்விக்கும்
வழியைக் காட்டிவிட்டால்
வேறுவழி செல்லாது
துளியும் சேதமின்றி
நன்மைமட்டும் செய்துவிடும்
அடிக்கும் வெயிலையும்
அமைதிப் படுத்திவிடும்
துடிக்கும் பயிர்களின்
மூச்சுக்காற்றாய் மாறிவிடும்
இந்நீரின் சலசலப்பு
சங்கீதம் போலாகும்
மண்வெட்டி மறுக்கும்வரை
தன்வழியே போயிருக்கும்
சேற்றுக்குள் ளிறங்கி
சேதாரம் ஆகாமல்
நாற்றை விளைவித்து
சோறாகி பசியாற்றும்
நீர்பாய்ந்த நிலமெல்லாம்
இன்றெங்கே போனதுவோ
செழிப்பான வயற்காடு
செறிவிழந்து ஆனதுவே
விவசாயம் மறக்கப்பட்டு
வேறுதொழில் பிறக்குதுவே
விவசாயி வாழாவிட்டால்
உலகம் வீழ்ந்துவிடும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.