நீதியைத் தேடி:   பூ. சுப்ரமணியன்,

Updated on
1 min read

கறந்த பாலில் நீர்
கடைந்த மோரில் தயிர்
உயிர் இல்லாத உலகம் 
உடல் இல்லாத உயிர் 
காய்ந்த சருகில் பசுமை
பட்ட மரத்தில் இலைகள்
தேடித்தேடி அலைந்தோம்

அன்பில்லா அன்னை
துன்பமில்லா வாழ்வு
ஆசையில்லா உறவு  
இசையில்லா பாடல்  
கரையில்லா நதிகள்
சிந்தனையில்லா மனது
நிந்தனையில்லா அரசியல் 
தேடித்தேடி அலைந்தோம்

மனுநீதிச் சோழன் காத்த நீதி
மன்னன் கரிகாலன் வழங்கிய நீதி
காவியங்களில் காணும் நீதி  
சுயநலமில்லா நீதியினை
தேடித் தேடி அலைந்தோம்  

நீதி நிதியின் பின்னும்
பதவியின் பின்னும்
சுற்றிக் கொண்டு
மிரட்டலில் பயந்து
பதுங்கி நின்றுகொண்டு
சுயநலத்தில் சுகம் கண்டு
நீதி தொலைந்து கொண்டிருப்பதை
நாளிதழ்களிலே பார்க்கிறோம் !

தேடித் தேடியே காலம் தேய்ந்தது
தேடும் படலமோ நாளும்
முடிவில்லா கதையானது .
ஓடி ஓடி ஒன்றும் புரியவில்லை
ஓடும் நதியும் நிற்கவில்லை
கூடி கூடிப் பேசிப் பார்த்தும்
நாடிய நீதி தேவதை எங்கே ?

என்றாவது ஒரு நாளில்
குறிஞ்சி மலர் பூக்கும்
நீதிக்கு விடிவு கிடைக்கும்
அப்போது         
நீதிதேவதை காலடியின் கீழே
நிதி பதவி மிரட்டல் சுயநலம்எல்லாமே
நசுங்கி விடும் !

வன்முறைக்கு விடைகொடுத்து
பொறுமைக்கு இடம் கொடுத்து 
நீதிக்கு தலை வணங்குவோம்   
அப்போது நீதியைத் தேடி
நாம் அலைய வேண்டாம்
நீதி தேவதை தோன்றுவாள் !                                       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com