கண்சிமிட்டும் காலமதும் நமக்கா யிங்குக்
காத்திருக்கா தொருகணமும் கடந்து போகும்
மண்மீது மீண்டுமந்தத் தருணம் வாரா
மனமேநீ இழந்ததைப்பெற வாய்ப்பே யில்லை.
எண்ணத்தால் இமயத்தைத் தொடலாம் ஆனால்
எப்போதும் உன்கால்கள் பூமி யில்தாம்.
திண்ணமுடன் வெற்றியினை ஈட்டு தற்குச்
செயலாலே முயன்றாலே சிறக்கு மன்றோ!
இளைஞரேஉம் கண்சிமிட்டல் கன்னிப் பெண்கள்
இருக்கின்ற திசைநோக்கி இருப்ப தல்ல!
வளையவரும் வெற்றியெனும் திக்கை நோக்கி
வளைத்துவிடக் கண்களுக்குக் கவனம் வேண்டும்
விளையாட்டாய்க் கண்சிமிட்டல் இருக்க வேண்டாம்
வினையாகும் முன்பதனை வேறுப டுத்தி
விளையவரும் இலக்கதனை நோக்கி இன்பம்
விளைக்கின்ற கண்சிட்டாய் இருக்க வேண்டும்.
சிகரத்தைத் தொடுகின்ற வண்ணம் கண்கள்
சிமிட்டல்கள் இருந்திட்டால் இமயம் கூட
நிகராகக் காலடியை முத்த மிட்டு
நின்றுவிடும் வெற்றிக்கே இட்டுச் செல்லும்
முகராசி கூட்டுவிக்கும் முன்னேற் றத்தை
முன்னாடி நிற்கவைக்கும் தலைமை யேற்கும்
புகழாரம் சூட்டிநிற்கும் புரியும் செய்கை
புன்னகையில் கண்சிமிட்டிப் பார்க்கு மன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.