மொழிகளின் விரல்கள்
தீண்டாத ஒரு யுகாந்திரப்
புதிர் காலத்தில்
மனிதக் கால் தடங்கள்
பதியாத ஒரு வனாந்தரத்தில்
வசித்த நாட்களைக் காலம்
புசித்து முடித்துதூக்கியெறிந்து விட்டது
காந்தர்வக் கனவுகள் மான்களாகவும்
கவிதைத் தோகைகள் விரித்தாடவும்
சாகுந்தலம் அரங்கேறிய தேவக்காடுகள்
ஊழிக்காலங்கள் முடிந்தவுடன்
இரைச்சல் சாலைகளாக
தேய்ந்துத்தேய்ந்து இறந்துபோயின
வண்ணத்துப்பூச்சிகள் சுமந்த
பூக்களின் கருப்பைகளுக்குள்
குடியிருந்த கனவுகள்
ஆலைப்புகைப் போக்கிகள் வழி
ஆவியாகப் போயின
என் நுரையீரல்களில்
காற்றுக்குப் பதில்
கவிதைகளை
வைத்திருக்கிறேன்
காதுகளுக்குச் சொல்வதினும்
காற்றுக்குச் சொல்கிறேன்
கவிதைகளை
எல்லோரும் உறங்கும்போது
உறங்காமல் இருக்கும்
நடுநிசி நிலாவின்
வெள்ளை மார்பகங்களில்
பால் குடித்துப் பேசுகிறேன்
நாவுகள் இல்லாத தேசத்தில்
தனிமையோடு மட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.