/

36. வீறு தானுடை வெற்பன் - பாடல் 2

உடலில் ஒரு பாதியில் பெண்ணுருவத்தைக் கொண்டவனாக விளங்கினாலும், கோணலை உடைய பிறையை

Updated On :10 செப்டம்பர் 2016, 12:09 pm

பாடல் 2

புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும்
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே

விளக்கம்

உடலில் ஒரு பாதியில் பெண்ணுருவத்தைக் கொண்டவனாக விளங்கினாலும், கோணலை உடைய பிறையை அணிந்திருந்தாலும், பெருமானின் திருமேனி மிகவும் அழகாக உள்ளது என்று முதல் பாடலில் கூறிய அப்பர் பிரான், விலை உயர்ந்த ஆடைகளை அணியாமல் புலித் தோலினை உடுத்தி இருந்தாலும், உடல் முழுவதும் திருநீறு பூசியிருந்தாலும் அழகியவனாக உள்ளான் என்று இந்தப் பாடலில் கூறுகின்றார். வெண் பூதி = வெண்ணீறு. ஆடுதல் = பூசிக்கொள்ளுதல். நள்ளி = விரும்புவதற்கு உரிய.

பொழிப்புரை

உடலில் புள்ளிகள் கொண்டுள்ள புலியின் தோலினை ஆடையாக ஏற்று இருந்தாலும், வெள்ளியின் நிறத்தினை ஒத்த திருநீற்றினை பூசியவராக காணப்பட்டாலும், நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கியதால் கரிய நிறம் கொண்ட கறையினை உடையவராக இருந்தாலும், அனைவரும் விரும்பத்தக்கதும் தெளிந்த நீரினை உடைய நீர் நிலைகள் சூழ்ந்ததும் ஆகிய நாரையூர் நகரில் உறையும் பெருமானின் மேனி மிகவும் வியப்பூட்டும் வகையில் அழகு உடையதாக விளங்குகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.