/

38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 4

பாலை யாழ் எனப்படும் இசைக்கருவியில்

Updated On :27 செப்டம்பர் 2016, 6:30 pm


பாடல் 4

    பாலை யாழ்மொழி ஆனவள் தாழ்சடை
    மேலள் ஆவது கண்டனள் விண்ணுறச்
    சோலை ஆர் தரு தோணிபுரவர்க்குச்
    சால நல்லள் ஆகின்றனள் தையலே

விளக்கம்

பாலை யாழ் என்பது யாழில் ஒரு வகை. யாழ் என்ற இசைக்கருவியே மிகவும் அரிதாக போய்விட்ட இந்நாளில் பண்டைய தமிழர்கள், பாலை யாழ், சகோட யாழ், மகர யாழ் என்று பல விதமான யாழ்க் கருவிகள் வைத்திருந்தது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றது. பார்வதி தேவியை, சிவபெருமான் தனது உடலில் வைத்திருக்கும் காட்சி, அந்த தாய்க்கு, கங்கையை சடையில் தரித்துள்ள காட்சியை நினைவூட்டுகின்றது. ஒருத்தியை உடலில் மறைத்தும், மற்றொருத்தியை தனது சடையில் மறைத்தும் சிவபெருமான் இருக்கும் நிலையினை, ஒருத்தியை மற்றொருத்தி அறியாத வண்ணம் மறைத்து வாழும் நிலையாக இந்த தாய் கருதுகின்றாள். எனவே இரு மனைவியர் இருந்தும் ஒருத்திக்கும் நல்லவனாக இல்லாத சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ள தனது பெண் மிகவும் நல்லவளாக இருக்கின்றாளே என்ற வருத்தம் தாய்க்கு ஏற்படுவதை அப்பர் பிரான் மிகவும் நயமாக இங்கே உரைக்கின்றார்.

பொழிப்புரை

பாலை யாழ் எனப்படும் இசைக்கருவியில் பிறக்கும் இனிய நாதம் போன்ற குரலினை உடைய கங்கை நங்கையை, தனது தலையில் சிவபெருமான் வைத்திருப்பதை அறிந்த பின்னரும், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த சோலைகள் நிறைந்த தோணிபுரத்தில் உறையும் இறைவனுக்கு மிகவும் நல்லவளாக, எனது மகள் இருக்கின்றாள்; தனக்குள்ள இரண்டு மனைவியரில், ஒருத்திக்கும் நல்லவனாக இல்லாமல் இருக்கும் சிவபெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவன் மீது மிகுந்த அன்பு கொண்டு அவனுக்கு நல்லவளாக இருக்கும் எனது மகளின் நிலை மிகவும் பரிதாபம். நான் என் செய்வேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.