/

117. காடது அணிகலம் - பாடல் 9

இனிய ஓசை

News image
Updated On :27 டிசம்பர் 2018, 6:30 pm

பாடல் 9:

    இலங்கைத் தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள்
    கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது
    கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்து
    சலங்கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே
 

விளக்கம்:

இலங்கைத் தலைவனை இறுத்தது, இரலை ஏந்திற்று, கலங்கிய கூற்று குமை பெற்றது, இல் நாள் மாணி உயிர் பெற்றது, கலங்கிளர் மொந்தை கொட்டுவர், காட்டகத்து ஆடுவர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். இறுத்தல்=ஒடித்தல், நெரித்தல்; இரலை=மான்; இல் நாள் மாணி=விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டுகள் ஏற்கனவே முடிந்தமையால் வாழ்நாள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த சிறுவன் மார்க்கண்டேயன்; கொட்டுதல்=ஒலி உண்டாக்குதல்; கலங்கிளர் மொந்தை=மண் பாண்டத்தின் வாய்ப்பகுதி தோலால் இறுகக் கட்டப்பட்டு மூடப்பட்ட இசைக்கருவி; கலம் என்பதற்கு யாழ் என்று பொருள் கொண்டு இனிய ஓசை எழுப்பும் மொந்தை இசைக் கருவி என்றும் விளக்கம் சிலரால் அளிக்கப் படுகின்றது. சலம் கிளர்=நீர் நிரம்பிய; குமைத்தல்=அழித்தல், வருந்துதல் என்ற பொருளும் பொருந்தும்.  

பொழிப்புரை: 

கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த இலங்கைத் தலைவன் இராவணனை மலையின் கீழே அழுத்தி துன்புறுத்தி வலியிழக்கச் செய்து நெருக்கியவர் சிவபெருமான்: அவர், தன்னை நோக்கி ஏவப்பட்ட மான் கன்றின் முரட்டு குணத்தினை மாற்றி துள்ளி  விளையாடும் மானாக தனது கரத்தில் ஏந்தியவர் ஆவார்; விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டுகள் முடிந்தமையால் வாழ்நாள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த சிறுவன் மார்க்கண்டேயன் என்றும் அழியாத சிரஞ்சீவியாக இருக்கும் வண்ணம் புதுவாழ்வு அளித்து உயிர் வாழச் செய்தவர் சிவபெருமான் ஆவார்; சிவபெருமானின் காலால் பெற்ற உதையினால் வருந்தி கீழே விழுந்து அழிந்தவன் இயமன்;. சிவபெருமான் காட்டினில் நின்று ஆடுபவராகவும், மொந்தை எனப்படும் தோற்கருவியை வாசிப்பவராகவும் உள்ளார்; இத்தகைய வியத்தகு தன்மைகள் உடைய பெருமான், நீர் வளம் நிறைந்த வயல்கள் உடைய சண்பை (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரினில் பொருந்தி உறையும் மேலான கடவுளர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.