/

101. நின்று மலர் தூவி  - பாடல் 6

புண்ணிய தீர்த்தமாக

News image
Updated On :11 ஜனவரி 2019, 5:59 am

பாடல் 6:

    மொய்யார் முதுகுன்றில்
    ஐயா என வல்லார்
    பொய்யார் இரவோர்க்குச்
    செய்யாய் அணியாளே

விளக்கம்:

செய்யாள்=திருமகள்; மொய்க்கும்=திரண்டு வந்து நெருக்கும்; இறை வழிபாடு தீய குணங்களை நீக்கி நற்குணங்களை வளர்க்கும் என்பதை இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். உலோபியாக இருந்து அடுத்தவர்க்கு ஏதும் கொடுக்காமல் வாழ்வது உயிரின் ஆறு உட்பகைகளில் ஒன்றாக கருதப் படுகின்றது. எனவே அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால், இறைவன் அவ்வாறு நாம் அடுத்தவர்க்கு உதவ தேவையான செல்வத்தை நமக்கு அருளுவார் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவையாறு பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது. அவர்களின் மனதினில், அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை உருவாக்குபவர் இறைவன் என்று அப்பர் பிரான் ஐயாற்றின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.38.10) குறிப்பிடுகின்றார். தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடுத்தவர்க்கு கொடுத்து உதவுவோர்க்கு இறைவனின் அருள் உண்டு என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இறைவன், கரப்பவர்க்கு தண்டனை அளிப்பார் என்பதை உணர்த்தும் விதமாக கங்கையைத் தனது சடையில் மறைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக குறிப்பிடப் படுகின்றது.

கபில முனிவரை, தங்களது தந்தை சகரன் செய்யவிருந்த அசுவமேத யாகத்து குதிரையைத் திருடியவன் என்று தவறாக கருதி, அவர் மீது பாய்ந்த சகரனின் புத்திரர்கள் அனைவரும் தியானத்திலிருந்து விழித்த கபிலரின் கண் பார்வையால் சாம்பலாக எரிந்தனர். தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில், வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது.       

    இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
    கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
    பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்த
    அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

கங்கை நதியினைத் தனது சடையில் அடக்கிய பின்னர் அதனை சிறிதுசிறிதாக விடுவித்து, நிலத்தில் பாயச் செய்து புண்ணிய தீர்த்தமாக உலகோர் போற்றும் நிலைக்கு அருள் புரிந்தவர் பெருமான் தானே; மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியின் வேகத்தை இறைவன் தடுத்துத் தனது சடையில் அடக்கிக் கொண்டு சிறிய நீரோடையாக வெளியிட்டதன் பயனாக இன்றும் கங்கை நதி ஓடிக்கொண்டு இருக்கின்றது, அந்த நதியில் குளிப்பவர்களும் இதனால் பயனடைவதாக நம்பப் படுகின்றது. இவ்வாறு கங்கை நீர் ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இறைவன் இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவரது சோற்றுத்துறை பதிகத்தின் ஒரு பாடலை (4.41.6) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், மிகவும் ஆரவாரத்துடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று பின்னர் அதனை விடுவித்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கங்கை நதி அவ்வாறு விடுபட்டதால் தானே, புண்ணிய தீர்த்தமாக உலகோர் கருதப்படும் நிலைக்கு உயர்ந்தது. கங்கையில் நீராடுவோர் தங்களது பாவங்கள் தீர்க்கப் பெற்றாலும், அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு கங்கை நதி எவ்வகையிலும் உதவி செய்ய முடியாது. பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து எவரேனும் விடுதலை பெறவேண்டும் என்றால், பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்ற செய்தியையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த நிலவுலகத்திலிருந்து நிலையாக பிரிக்கப்பட்டு நிலையாக முக்தி நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே உயிரின் அவா.    


    பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
    பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே
    ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
    தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறையனாரே   
 

பொழிப்புரை:

அடியார்கள் திரண்டு வந்து நெருங்கி நின்று வணங்கும் முதுகுன்றத்து இறைவனை, தலைவனே என்று அழைத்துத் தொழும் அன்பர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தை, இல்லை என்று சொல்லாத வகையில் இரப்பவர்களுக்கு அளித்து உதவுவார்கள். அவர்கள் மேன்மேலும் பலருக்கு உதவும் வண்ணம், திருமகள் அவர்களுக்கு அணிகலனாகத் திகழ்ந்து அவர்களது செல்வத்தினை மேலும் பெருக்குவாள்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.