ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 5

உயிர்கள் இன்பமுடன் வாழ

News image
Updated On :13 ஏப்ரல் 2019, 6:30 pm


பாடல் 5:

    கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
    உரிமையின் உலகு உயிர் அளித்த நின் தன்
    பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்
    அருமையில் அளப்பு அரிது ஆயவனே
    அரவேர் இடையாளொடும் அலைகடல் மலி புகலி
    பொருள் சேர் தர நாள்தொறும் புவி மிசைப் பொலிந்தவனே 

விளக்கம்:

அரவேர் இடையாள்=அரவு ஏர் இடையாள், பாம்பு போன்று நுண்ணியதும் அழகு வாய்ந்ததும் ஆகிய இடையினை உடைய உமைநங்கை; துவளுதல், ஒளிவீசுதல், மெலிந்து  இருத்தல் ஆகிய பாம்பின் மூன்று தன்மைகளையும் கொண்ட இடை என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானின் பெருமையை உள்ளபடி அறிந்து கூறுவது மிகவும் அரிதான செய்கை என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு சொல்வது நமக்கு நன்றுடையானை என்று தொடங்கும் சிராப்பள்ளி பதிகத்தின் ஒரு பாடலை (1.93.8) நினைவூட்டுகின்றது. பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில பெருமைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்றும் இந்த பாடலில்  திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.. 

    மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்
    தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார் 
    சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
    சில வல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே 

பெருமானின் கருணைத் திறம் மற்றும் அவரது பெருமையினையும் ஆராயத் தொடங்கினால் அவை அளவு கடந்தவை என்பது நமக்கு புரியும். எனவே அவற்றை ஆராய்வதை தவிர்ப்பீர்களாக என்று ஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல் வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பாசுரத்தின் (3.55.4) பாடலாகும். தாட்பால்=தாள் பால், ஆட்பால்=ஆள் பால், அடியவர்கள் பால், கேட்பால் புகில்=கேட்கத் தொடங்குவீர்களாயின்; கிளக்க வேண்டா= அவை பற்றிய ஆராய்ச்சியில் புகவேண்டாம்; கோட்பால்=கோள்களின் தன்மையால் ஏற்படும் தலைநின்று=சார்ந்து.   

    ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
    கேட்பால் புகில் அளவில்லை கிளக்க வேண்டா  
    கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
    தாட்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்கத் தக்கார்

பக்குவம் அடைந்த உயிர்களுக்கு இறைவன் அருள் புரிகின்ற தன்மையும், அவனது பழமை வாய்ந்த பல் புகழுக்குரிய செயல்கள் பெருமைகள் அனைத்தையும், சொல்வதற்கும் கேட்பதற்கும் நாம் முனைந்தால், அதற்கு அளவு என்பது ஏதும் இல்லை என்பதை உணர்வோம். எனவே அத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்ப்பீர்களாக. கோள்களின் தன்மையால் தீவினைகளும் நம்மை பிணைத்துள்ள தீய வினைகளால் ஏற்படும் துன்பங்களும் தனது அடியார்களை அடையாமால் இருக்கும் வண்ணம் காத்து அருள் புரிபவன் எமது தந்தையாகிய பெருமான். அவனது திருவடிகளை வணங்கி, அந்த திருவடிகள் மட்டுமே நமக்கு பற்றுக்கோடு என்று சார்ந்து நிற்கும் அடியார்களுக்கு பெருமானின் திருவடிகள் ஞானத்தை உணர்த்த, அந்த ஞானத்துள் அடங்கி நிட்டை கைகூட நிற்பார்கள், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தன்னுள் ஒடுங்கிய உயிர்களை, பிரளயம் முடிந்த பின்பு விடுவிக்கும் பெருமான், பல பொருட்களையும் உலகத்தில் தோற்றுவிக்கின்றார். இந்த உலகினில் பிறவியெடுத்த உயிர்கள் இன்பமுடன் வாழ இந்த பொருட்கள் தோற்றுவிக்கப் படுகின்றன. செடியிலிருந்து விதை தோன்றுகின்றதா அல்லது விதையிலிருந்து செடி தோன்றுகின்றதா என்பது காலம் காலமாக கேட்கப்படும் கேள்வி; தம்மில் ஒடுங்கிய உலகத்து உயிர்கள் மற்றும் உலகத்து பொருட்கள் அனைத்தையும் பெருமான் விடுவிக்க. பிரளயம் முடிந்த பின்பு இயல்பு வாழ்க்கை உலகில் தொடங்குகின்றது. இவ்வாறு விதை ஏதும் இல்லாமல், அதாவது மூலம் ஏதும் இல்லமால், எந்த பொருளையும் தோற்றுவிக்கும் வல்லமை இறைவனுக்கு உள்ளது என்பதை புலப்படுத்தும் வண்ணம் உள்ள திருவாசகப் பாடலை நாம் இங்கே காண்போம். விச்சு=விதை; வைச்சு=நிலைநிறுத்தி; வாங்குவாய்=அழிப்பாய். பெருமான் செய்யும் மூன்று தொழில்களும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பெரிய அன்பர் என்று பெருமானின் அடியார்களுடன் தன்னை பெருமான் கூட்டுவித்த செய்கையை குறிப்பிடும் அடிகளார், பின்னர் தன்னை கைவிடுதல் அவருக்கு அழகா என்ற கேள்வியை எழுப்புகின்றார். தாம் அறியாமல் ஒரு நச்சு மரத்தினை வளர்த்திருந்தாலும் வளர்த்த பாசத்தால் அதை எவரும் வெட்டாமல் இருப்பது போன்று, என்னை இந்த அளவுக்கு மாற்றிய நீ, எனது குறைகள் காரணமாக இப்போது கைவிடலாகாது என்று பெருமானிடம் பேசுவது போன்று அமைந்த பாடல்.   

    விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம்
              முழுதும் யாவையும்       
    வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன்
              கோயில் வாயினில்
    பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம்
              வளர்த்தது ஒஅர்
    நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனம்
              உடைய நாதனே

மேற்கண்ட பாடலில் அடிகளார் கூறியது போன்று, உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் தோற்றுவிப்பது இறைவனே என்பதே புவிமிசை பொருள் சேர்தர என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தரால் இந்த பதிகத்தில் உணர்த்தப் படுகின்றது. .    
 
பொழிப்புரை:

ஒளிவீசும் கரிய நிறத்தினை உடைய கடலில் தோன்றிய விடத்தை உண்டு உலகினை காப்பாற்றிய பெருமானே, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் தோற்றுவிக்கும் உனது பெருமையை, உலகத்தவர் ஓரளவு பேசலாமே தவிர, முழுவதுமாக பேச இயலாது. உனது பெருமையை முற்றிலும் அளந்து பேசும் திறமை படைத்தவர் எவரும் எங்கும் இல்லை. பாம்பின் உடல் போன்று துவளும் தன்மை கொண்டதும் மெலிவானதும் ஒளி வீசுவதும் ஆகிய இடையினைக் கொண்ட உமை அன்னையுடன் கூடி புகலி நகரில் பொருந்தி உறைகின்ற பெருமானே, நீ தான் இந்த பரந்த உலகினில் பல பொருட்களைத் தோற்றுவித்து, அந்த பொருட்களின் பயனை உயிர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் வண்ணம் செயல் புரிகின்றாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.