/

130. தண்ணார் திங்கள் - பாடல் 10

சமணப் பள்ளிகள்

News image
Updated On :1 ஜூன் 2019, 6:30 pm

பாடல் 10:

    தாறிடு பெண்ணைத் தட்டுடையாரும் தாம் உண்ணும்
    சோறு உடையார் சொல் தேறன்மின் வெண்ணூல் சேர் மார்பன்
    ஏறுடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேலோர்
    ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே

விளக்கம்:

தாறிடு பெண்ணை=குலை தள்ளும் பனைமரங்கள்; தட்டு=பனை ஓலையால் செய்யப்பட்ட; தடுக்குப் பாய்களை சமணர்கள் தாங்கள் செல்லும் இடம் எல்லாம் எடுத்து செல்வது அவர்களின் வழக்கம். பொதுவாக சமண குருமார்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி செல்லும் அவர்களின் தேவை கருதி, இரவினில் அவர்கள் படுப்பதற்காக பல சமணப் பள்ளிகள் அந்நாட்களில் இருந்தன. புதுக்கோட்டை அருகில் உள்ள சித்தன்னவாசல் செல்லும் வழியில் குன்றினைக் குடைந்து செய்யப்பட்ட சமணப் படுக்கைகள் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இவ்வாறு எடுத்துச் செல்லும் பாய்களை இடுப்பினில் சுற்றிக் கொள்வதும் உண்டு, அந்த பழக்கத்தையே இங்கே தட்டுடையார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சோறுடையார்=சோற்றினை உட்கொள்வதே வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக கருதிய புத்தர்கள்; பரன்=அனைவர்க்கும் மேலானவன்; தனது சொற்களால் ஊக்கமடைந்து இந்த தலம் செல்லும் அடியார்களின் மனதினைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோரின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை இங்கே அளிக்கப் படுகின்றது.      

பொழிப்புரை:

குலை தள்ளும் பனை மரங்களின் ஓலைகளால் செய்யப்பட்ட தடுக்கினை ஆடையாக உடுக்கும் சமணர்களும், சோறு உண்பதே வாழ்க்கையின் பிரதான நோக்கமாக கருதும் புத்தர்களும் சொல்லும் சொற்களை ஒரு பொருட்டாக கருதாதீர்கள்; தனது மார்பினில் வெண்ணூல் அணிந்தவனும், எருதினை வாகனமாகக் கொண்டவனும், அனைவர்க்கும் மேலானவனும், எலும்பினை ஆபரணமாக அணிந்தவனும், தனது நீண்ட சடையின் மேல் கங்கை நதியைத் தேக்கியவனும் ஆகிய பெருமான் சேர்ந்து எழுந்தருளி இருப்பது கண்ணார் கோயில் என்ற தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.