/

131. அருத்தனை அறவனை - பாடல் 8

அன்பே உருவான பெருமான்

News image
Updated On :10 ஜூன் 2019, 6:30 pm

பாடல் 8:

    நோதல் செய்து அரக்கனை நோக்கழியச்
    சாதல் செய்து அவன் அடி சரண் எனலும்
    ஆதரவு அருள் செய்த அடிகளவர்
    காதல் செய் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

ஆதரவு=அன்புடன் செய்யப்படும் உதவி; நோதல் செய்து=வருத்தி; நோக்கு=அருட்பார்வை: அழிய= இல்லாத நிலை ஏற்பட; அன்பே உருவான பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்பவன். பெருமானை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தனது செருக்கினால் மறந்த அரக்கன், பெருமான் உறையும் மலை என்ற சிறந்த தன்மையையும் புரிந்து கொள்ளாமல், அந்த மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்து அந்த முயற்சியால் உமையன்னை அச்சம் கொள்ளுமாறு மலையினை அசைத்தான். அத்தகைய செய்கையால் பெருமானின் அருட்பார்வையினை அரக்கன் இழந்ததுமன்றி, பெருமானின் கால் விரல் அழுத்தத்தால் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நெருக்குண்டான். இந்த நிலையினை நோக்கழிய அரக்கனை நோதல் செய்து என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாதல்-வலிமை அழிந்தவன்;
    

பொழிப்புரை:

செருக்கு மிகுந்த தனது செயலால், இறைவனது அருட்பார்வையை இழந்த அரக்கன் இராவணன், தான் கயிலை மலையினை பேர்த்து எடுக்க செய்த முயற்சியின் விளைவாக, கயிலை மலையின் கீழே அகப்பட்டு நெருக்குண்டு தனது வலிமை முழுவதும் அழிந்த நிலையில், பெருமானே உனது திருவடிகளே சரணம் என்று இறைஞ்சி சாம கானம் பாடலும், அரக்கன் செய்த தவறினை பொருட்படுத்தாது அன்புடன் அரக்கனுக்கு பல வகையிலும் உதவி செய்த பெருமான், மிகுந்த விருப்பத்துடன் உறைவது வளம் மிகுந்த கடைமுடி தலமாகும்.     
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.