/

130. தண்ணார் திங்கள் - பாடல் 2

குயில்கள் நடமாடின

News image
Updated On :24 மே 2019, 6:30 pm

பாடல் 2:

    கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும்
    வந்து அமர் தெண்ணீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டிக்
    கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆடக் குளிர் வண்டு
    செந்திசை பாடும் சீர் திகழ் கண்ணார் கோயிலே


விளக்கம்:

மண்ணி=காவிரி நதியின் கிளையாறுகளில் ஒன்று: கோகிலம்=குயில்; செந்து=தமிழ்ப் பண்களில் ஒன்று; செவ்வழி என்றும் கூறுவார்கள்; கந்து=கந்தம், நறுமணம்; சாந்து=சந்தனக் கட்டைகள்; கார்=கரிய, வயிரம் பாய்ந்து உறுதியான; கதிர்=ஒளிவீசும்; வந்தமர்=வந்து சேரும்; கொந்து=கொத்து கொத்தாக மலர்கள் மலரும் வளமான சோலைகள்; பொதுவாக குயில்கள் பாடுவதாக பாடல்களில் குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில் குயில்கள் நடமாடின என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடும் இயல்பினை உடைய  குயில்கள் நடமாடியது இந்த தலத்தின் தனிச் சிறப்பு போலும். இந்த குறிப்பு பெருமானின் அருள் இருந்தால் இயல்பு நிலை மாறி சிறப்பான நிலையினை எவரும் அடையலாம் என்பதை உணர்த்துகின்றது போல அமைந்துள்ளது. வண்டு பாடும் என்ற தொடரினை வண்டும் பாடும் என்று மாற்றி அடியார்கள் செவ்வழிப் பண்ணில் பதிகங்கள் பாடியது போன்று தலத்து வண்டுகளும் பாடின என்று சிவக்கவியார் தனது பெரியபுராண விளக்கத்தில் கூறுகின்றார். வண்டுகள் கற்றுக் கொண்டு பாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றன என்ற குறிப்பு அடியார்கள் இந்த தலத்தில் அடியார்கள் இடைவிடாது சிறந்த இன்னிசைப் பாடல்கள் பாடினர் என்பதை உணர்த்துகின்றது. கண்ணார்கோயில் சென்று தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை முதல் பாடலில் உணர்த்திய சம்பந்தர் அடுத்த இரண்டு பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை குறிப்பிடுகின்றார்.        

பொழிப்புரை:

நறுமணம் பொருந்திய சந்தனக் கட்டைகளும் வயிரம் பாய்ந்து உறுதியான கரிய அகில் கட்டைகளும் குளிர்ச்சி பொருந்தி அழகுடன் ஒளிவீசும் முத்துக்களும் அடித்துக் கொண்டு வரப்படும் நீர்ப் பெருக்கினை உடைய மண்ணியாறு வந்து சேர்வதால் நிலவளம் மிகுந்த வயல்களையும் கொத்து கொத்தாக மலரும் மலர்கள் கொண்ட சோலைகளும் நிறைந்த இந்த தலத்தினில் மகிழ்ச்சி பொங்க குயில்கள் நடமாடுகின்றன. குளிர்ந்த சூழ்நிலையை விரும்பும் வண்டுகள், அடியார்கள் செவ்வழிப் பண்ணில் இறைவனை துதித்து பாடல்களைக் கேட்டு, செவ்வழிப் பண்ணில் முரலும் சிறப்பினை உடையது கண்ணார்கோயில் எனப்படும் திருத்தலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.