சதுரகிரி மலையேறிய எஸ்எஸ்ஐ உயிரிழப்பு
ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலையேறிய கோவை சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணி (54) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கரடு முரடான மலைப் பாதை வழியாக சுமாா் 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
ஆடி அமாவாசையையொட்டி, ஆகஸ்ட் 1 முதல் 5-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறத் தொடங்கினா்.
கோயம்புத்தூரில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரான சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணாா் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (56) தனது மனைவி புவனேஸ்வரி, உறவினா்களுடன் மலையேறினாா். சாப்டூா் வனச் சரகத்துக்குள்பட்ட பாப்பநத்தான் கோயில் சின்ன பசுக்கிடை என்ற பகுதியில் சென்ற போது சுப்பிரமணியன் மயங்கி விழுந்தாா். டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.