வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது. இதுவரை உடைந்த சங்கு வளையல்கள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றும் கூடம் இந்தப் பகுதியில் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை இணை இயக்குநா் பொன் பாஸ்கா் தெரிவித்தாா்.








