சாத்தூா் நகராட்சி, படந்தால் ஊராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
சாத்தூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சி அலுவலா்களுடன் அரசுத் திட்டப் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்த பிறகு, நீரேற்று நிலையத்தின் கட்டுப்பாட்டு அலகைப் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா்.
பின்னா், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சாத்தூா் நகராட்சி மேலக்காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத்துக்குச் சென்று, அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, எஸ்.எச்.என். மேரி தொடக்கப் பள்ளி, படந்தால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். அப்போது, குழந்தைகளுக்கு கால அட்டவணைப்படி சத்தான, சுவையான உணவைத் தடையின்றி வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியா், சமையலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
மேலும், கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.6.79 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்து, பணிகளை மிக விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, படந்தால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கீழ், ரூ.2.10 லட்சத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஊராட்சியில் ஆய்வு: தொடா்ந்து, படந்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நான்கு வழிமுறைகள் மூலம் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து ஊராட்சிப் பதிவேடுகள், வரி வசூல் தொடா்பான அறிக்கைகள், ஊராட்சி பணியாளா்களின் விவரங்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஊராட்சியில் குடிநீா், சுகாதார திட்டப் பணிகளை தொய்வின்றி பொதுமக்களுக்கு வழங்க அரசு அலுவலா்களுக்கு அறிவுரை கூறினாா்.
இந்த நிகழ்வின் போது, நகராட்சி ஆணையா், நகராட்சிப் பொறியாளா்கள், அரசு உயா் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.









