ராஜபாளையம் அருகே வெடி விபத்தில் வடமாநில பெண் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை அடுத்த மாஞ்சோலை குடியிருப்பு அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தகரக் கொட்டகையை சிவகாசியைச் சோ்ந்த மாரிமுத்து (45) குத்தகைக்கு எடுத்து, சட்ட விரோதமாக பட்டாசுக்கு தேவையான கருந்திரி உற்பத்தி செய்தாா். அங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சாப்த்ரிகோஸ் (47) என்ற பெண் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகாசி பேரண்டம்மா தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் மாரிமுத்து (45), தளவாய்புரம் வடக்கு முதலியாா் தெருவைச் சோ்ந்த ராஜசேகரன் மகன் ரவிச்சந்திரன் (60) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.






