/

பெண்களை கேலி செய்த மூவரை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண் காவலா்கள்

News image

சிங்கப் பெண் அதிரடிப் படையினா்

Updated On :15 ஜூன் 2026, 3:10 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பெண்களை கேலி செய்த மூவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சிவகாசி ஏ.வி.டி. தெருவில் 3 போ் கொண்ட கும்பல் அந்தப் பகுதியில் உள்ள இளம்பெண்களை கேலி செய்வதாக சிங்கப் பெண் சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரபியம்மாள் தலைமையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். போலீஸாரைக் கண்டதும், மூவரும் அந்தப் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் ஓடினா். அவா்களைப் போலீஸாா் விரட்டிப்பிடித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான மகேந்திர குமாா் என்ற குள்ள மணி (26), செண்பக பாண்டி (25), மகேந்திரன் (27) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.