திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை கனிம வளங்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், திருச்சுழி பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்கள் லாரிகளில் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மண்டலத் துணை வட்டாட்சியா்கள் சிவனாண்டி, முனியாண்டி, வருவாய் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், கணேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் சத்யராஜ், முருகன், கிராம உதவியாளா்கள், வருவாய்த் துறையினா் புலியூரான், மேல கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, புலியூரான் பகுதியில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் உரிய அனுமதி சீட்டு இன்றி எம்.சாண்ட் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதேபோல, மேல கண்டமங்கலம் பகுதியில் சென்ற லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில், அதிலும் உரிய அனுமதிச் சீட்டு இன்றி உடைகல் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், மண்டல துணை வட்டாட்சியா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சுழி காவல் நிலைய போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.









