பென்சில் ஓவியக் கண்காட்சி!
சீறிப் பாயும் காளைகள், சாமான்ய மனிதனின் இயல்பு வடிவம், சட்ட மேதை அம்பேத்கர், ஜெயலலிதாவின் பல பரிமாணங்கள், வெளிநாட்டு தலைவர்கள்,


சீறிப் பாயும் காளைகள், சாமான்ய மனிதனின் இயல்பு வடிவம், சட்ட மேதை அம்பேத்கர், ஜெயலலிதாவின் பல பரிமாணங்கள், வெளிநாட்டு தலைவர்கள், தந்தையும் மகனும் என ஓவியர் ஆண்டனி முனுசாமியின் கைவண்ணத்தில் கண்ணையும், மனதையும் ஒருங்கே கட்டிப்போடும் 70- க்கும் மேற்பட்ட பென்சில் ஓவியங்களின் கண்காட்சி சமீபத்தில் சென்னை லலித் கலா அகாதெமியில் நடைபெற்றது. இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""சிறு வயதிலிருந்தே எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்தது. கலைக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஓவியத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது என்றால், எனக்கு பூர்வீகம் ராமாபுரம் பகுதியில் உள்ள மணப்பாக்கம்தான். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது என் அப்பா முனுசாமி அங்கே பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இதனால் என் பள்ளி விடுமுறை நாட்களில் எல்லாம் அப்பாவுடன் பஞ்சாயத்து ஆபிஸýக்குச் சென்று விடுவேன். அங்கே அப்பா காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்களின் ஓவியங்களை வைத்திருப்பார்கள். அந்த படங்கள் எல்லாம் என்னை பெரிய அளவில் ஈர்த்தன. இதனால் நேரம் போவது தெரியாமல் அந்தப் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன்.
அப்பாவுக்கு தலைவர்களின் வழக்கமான படங்களாக இல்லாமல் வித்தியாசமான படங்கள் பலவற்றை தேடிப் பிடித்து வாங்கி வந்து வைப்பதில் ஆர்வம் உண்டு. இதில் கோட்டோவியங்கள் எல்லாம் என்னைக் கவர்ந்தன. அந்த ஓவியங்களைப் பார்த்து நானும் வரைந்து அப்பாவிடம் காண்பிப்பேன். அவர் என்னைப் பாராட்டுவார்.
அந்த சமயத்தில் என் பள்ளியில் ஓவியம் வரைந்த போது அதைப் பார்த்த என் பள்ளி ஆசிரியர், ""உனக்கு ஓவியம் நன்றாக வரைய வருகிறது. நீ சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்து வரையக் கற்றுக் கொண்டால் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்'' என்றார்.
அப்போதே எனக்கான பாதை ஓவியம்தான் என்பதை தீர்மானம் செய்துவிட்டேன். அந்த ஆர்வத்தில் தான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். படிப்பு முடிந்ததும். சினிமாத்துறையில் அனிமேஷன் பீல்டில் வேலைக் கிடைத்தது. ஏழு ஆண்டுகள் அனிமேஷன் துறையில் வேலை செய்தேன். அதன் பிறகு சட்டம் படித்துவிட்டு தற்போது வக்கீலாக இருக்கிறேன்.
நான் அனிமேஷன் துறையில் இருந்தபோதும் சரி, சட்டத்துறையில் இருந்தபோதும் சரி எனக்குள் ஓவிய தாகம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் ஃப்ரீ லேன்சராக அனிமேஷன் துறையில் ஓவிய ஆலோசகராக இருக்கிறேன். நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே எனக்கு ஓவியக் கண்காட்சி நடத்த வேண்டும் என்று ஆசை இருந்தது. ஓவிய கண்காட்சி வைக்க வேண்டும் என்பதற்காக 15 ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன். தற்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த கண்காட்சியில் வைத்திருக்கும் ஓவியங்கள் எல்லாம் 2 ஆண்டுகளாக நான் வரைந்தவை. இதில் 90 சதவீதம் பென்சில் மட்டுமே உபயோகித்து வரைந்தவை. 10 சதவீதம் சார்க்கோல் , வாட்டர் கலர் ஆகியவற்றை உபயோகித்து வரைந்துள்ளேன். பெரும்பாலும் ஓவியக் கண்காட்சி என்றால் பல வண்ணங்களால் ஆன கலர்புல் ஓவியங்களைத்தான் வைப்பார்கள். நான் அறிந்த வரை பென்சில் ஓவியங்கள் மட்டுமே உள்ள கண்காட்சியைப் பார்த்ததில்லை. எனவே புதுமையாக இருக்கட்டுமே என்று பென்சில் ஓவியங்களைத் தேர்வு செய்தேன்.
ஓவியக் கல்லூரியில் முதல்வராக இருந்த ஆல்போன்ஸ் அருள்தாஸ் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதையடுத்து, சமூகத்துக்கு பயன்படும்படியான ஓவியங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற ஆசையுள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...