வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பயிற்சி: எழுத்துக்களோடு பழகுங்கள்!

தற்போது யார் சார் எழுதுகிறாங்க? இ-மெயில், விடியோ போன், எஸ்எம்எஸ் எனத் தகவல் தொடர்பு விரிவடைந்தும், விரைவாகியும் போனதற்குப் பிறகு கைப்பட எழுதுதல் என்பதையே முற்றாக நிறுத்திப் போட்டு விட்டது.  ஆனால், ஒரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:22 am

தற்போது யார் சார் எழுதுகிறாங்க? இ-மெயில், விடியோ போன், எஸ்எம்எஸ் எனத் தகவல் தொடர்பு விரிவடைந்தும், விரைவாகியும் போனதற்குப் பிறகு கைப்பட எழுதுதல் என்பதையே முற்றாக நிறுத்திப் போட்டு விட்டது.

 ஆனால், ஒரு முதிர்ந்த நாகரிகத்துக்கு அடையாளமே, அவர்களின் மொழி சார்ந்த பேச்சும், எழுத்தும்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே... என்ற தமிழனின் பெருமைகள் எல்லாம் மாறி, எதிர்காலத்தில் தமிழனுக்குத் தமிழைத் திருத்தமாய் எழுத வராது என்றாகி விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது என்கின்றனர் தமிழறிஞர்கள்.

 இதற்குத் தீர்வு தான் என்ன...?

 திருவாரூரில் "எழுத்தோலை' என்ற அழகுத் தமிழ்க் கையெழுத்துப் பயிற்சியை அளித்து வரும் தமிழாசிரியர் ந. தமிழ்க்காவலனிடம் பேசினோம்.

 ""இன்றைய கணினி உலகில் தமிழ் எழுத்துகளைத் திருத்தமாக எழுதுவதற்கு முதன்மை தராமையால் செம்மொழியான தமிழ் கண்ணீர் சிந்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 ஒரு மொழியின் வரிவடிவம் உணர்வோடு கற்றுத்தரப்பட்டதும், கற்றுக் கொள்ளப்பட்டதும் தமிழினத்தால் மட்டுமே என்பதை நாம் பெருமையோடு நினைவில் கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் அனைவரும் எழுத்துகளை மணலில் விரலால் எழுதி, உணர்வால் மனதில் பதிய வைத்தனர்.

 அன்று விரல் என்ற உயிர்ப் பொருளால் உணர்வோடு எழுதிப் பயின்றார்கள். ஆனால் இன்று எழுதுகோல்கள், பென்சில்கள், வண்ணச் சுண்ணாம்புக் கட்டிகளும் என உயிரற்றக் கருவிகளால் எழுத்துப் பயிற்சியைத் தொடங்குவதாலோ என்னவோ எழுத்துகள் மனதில் பதியவில்லை போலும்!

 பள்ளிகளிலும் ஓர் எழுத்தை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது, அழகான வரிவடிவத்தை எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொடுப்பதில்லை. அச்சிடப்பட்ட, கோடிட்ட குறிப்பேடுகள் வரிசையாய் அணிவகுக்கின்றன. ஆசிரியர்களும், எழுதப்பட்டதா... ஆம்... எழுதப்பட்டது என்ற நிலையில் தமிழ் எழுத்துகள் கற்றுக் கொடுக்கப்பட்டதாக முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

 நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ் எழுத்துகள் 247-யும் எண் உருக்கள் 0 முதல் 9 வரையுள்ள 10 எண்களையும் 5 கோடுகளில் எழுதும் முறையை வடிவமைத்தேன். கால்வட்டம், அரை வட்டம், முக்கால் வட்டம், முழு வட்டம், குத்துக்கோடு, படுக்கைக் கோடு, சாய்வுக் கோடு என்னும் 7 வடிவ இயல் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தினேன்.

 இதனடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு மாணவர்களிடையே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் நல்ல பலன் கிடைத்தது.

 இந்த ஆய்வு செயலாராய்ச்சி என்ற நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கல்வித்துறைக்கு ஒப்படைவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. வழக்கம் போல், தமிழ் தமிழ்நாட்டோடு நின்றுவிட்டது.

 பொதிகை தொலைக்காட்சியில் 5 கோடுகளில் எழுதும் அழகுத்தமிழ் பயிற்சியை 20 நாள்களுக்கு விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்டதுதான் "எழுத்தோலை' என்ற கையெழுத்துப் பயிற்சி நிறுவனம். வணிக நோக்கமின்றி விரும்பி வருவோருக்கு கற்றுக் கொடுக்கும் பணியை தமிழார்வம் உள்ள சிலருடன் இணைந்து செய்து வருகிறேன். பள்ளிகளில் அழைத்தால் சென்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன். அதேபோன்று வரிவடிவ அமைப்பு, சொல் அமைவு, தெளிவான வாக்கிய அமைப்பு, விடையளித்தல் திறன் என மாணவர்களுக்கு மேம்பட்ட நிலையில் பயிற்சியும் வழங்கி வருகிறேன்'' என்றார் தமிழ்க்காவலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.