""மதுரையில் நிறைய நீர் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வில்லாபுரம் கண்மாய் என்ற ஒன்று இருந்தது. இப்போது அந்தக் கண்மாய் இருந்த இடத்தில் வீடுகள் வந்துவிட்டன. அதுபோல சிந்தாமணி கண்மாய், அனுப்பானடி கண்மாய் போன்றவை இருந்த இடத்தில் கட்டிடங்கள் வந்துவிட்டன. தல்லாகுளம், சொக்கிகுளம், பி.பி.குளம் போன்ற பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் இருந்தன. மதுரையின் மையப்பகுதியான டவுன்ஹால் ரோட்டில் பெருமாள் கோவில் தெப்பக்குளம் இப்போதும் இருக்கிறது. அதில் முன்பெல்லாம் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது நிரப்புவதில்லை. இப்போது மதுரையில் உள்ள பெரியார் பஸ் ஸ்டாண்ட் இருந்த இடம் பெரிய குளமாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. இப்போதும் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் மழை பெய்தால் முழுங்கால் அளவுத் தண்ணீர் தேங்கிவிடும். என்ன காரணம்? அந்த இடம் பள்ளம். இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்மாய், குளங்கள் போன்றவற்றை அமைக்கும் பணி சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. இதற்கு நிறையக் கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கண்மாயிலும் அமைக்கப்பட்டிருக்கும் மடைகளின் அமைப்பு, அவற்றில் காணப்படும் கல்வெட்டுகளை வைத்தே நாம் இதைத் தெரிந்து கொள்ளலாம். விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்காகவே அக்காலத்தில் நம் முன்னோர்கள் கண்மாய், குளம் போன்றவற்றை ஏற்படுத்தினார்கள். ஏனென்றால் ஆண்டுக்கு 30 அல்லது 40 நாட்களே மழை பெய்யும். அந்த மழைநீரை இப்படிக் குளங்களிலும், கண்மாய்களிலும் சேமித்து வைத்தால்தான் நிலத்தடி நீர் வற்றாது. குடிக்கவும், குளிக்கவும், பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக, நாம் நீர் வளத்தைப் பற்றிய சிறு அக்கறையும் இல்லாமல் இருக்கிறோம். நீர் நிலைகளில் கட்டிடங்களைக் கட்டி நீர் வளத்தை அழித்துவிட்டோம். இதனால் இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கொடுமையானநிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இப்போது கிடைக்கும் தண்ணீர் கூட கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்'' என்கிறார் கவலையுடன். தொடர்ந்தார்.