நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கிலக் கல்வி. தேவிகுளம் பீர்மேடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் என் தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லாரும் கங்காணிகள். இப்போது கண்ணன் தேவன் டீ என்ற பெயரில் உள்ள எஸ்டேட் அப்போது ஜேம்ஸ் ஃபின்லே என்ற பெயரில் இருந்தது. டீ எஸ்டேட்டை நடத்திய வெள்ளைக்காரன் எஸ்டேட்டில் வேலை செய்த ஸ்டாப்களின், கங்காணிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தினான். அதில் ஆங்கிலத்தில்தான் எல்லாப் படிப்பும்.