சினிமாவில் இருந்து ஓய்வு? - அஜித் பதில்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்மபூஷண் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருக்கிறார்.
ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் 'பிங்க்' படத்தை ரீமேக் செய்ததற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேசத் தொடங்கிய அஜித், 'நான் 'பிங்க்' படத்தை தமிழில் ரீமேக் செய்ததற்குக் காரணம் இருக்கிறது.
'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு முந்தைய என்னுடைய சில படங்கள் என்னைக் குற்றவுணர்ச்சியடையச் செய்தன. பெண்களுக்கு எதிராக சில விஷயங்களை என்னுடைய படங்கள் ஊக்குவிப்பது போலத் தோன்றியது.
வில்லன்கள் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்யும்போது கதாநாயகன் சென்று அவர்களைக் காப்பாற்றுவது, காதல் என்கிற பெயரில் கதாநாயகன் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்வது போன்ற சித்திரிப்புகள் என்னுடைய படங்களில் தொடர்ந்திருக்கின்றன.
நாங்கள் திரையில் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் பின்பற்ற நினைப்பார்கள். நான் முந்தைய திரைப்படங்களில் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கு 'பிங்க்' படம் ஒரு வழியாக இருந்தது.
இப்போது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். இதே நிலைப்பாட்டிலிருக்கும் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் சந்திப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதைத் திட்டமிட முடியாது. நான் ஓய்வை அறிவிக்கும் சூழலுக்கு ஒருவேளை தள்ளப்படலாம்.' எனக் கூறினார்.
இயக்குநராக ராகவ் ரங்கநாதன்!
பன்முகத் திறமை கொண்டவரான ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த த்ரில்லர் படம் 'நாக் நாக்'. இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் ராகவ் ரங்கநாதன் பேசியதாவது... 'இது எனக்கு ஒரு முக்கியமான தருணம். மிகவும் தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதி.
இத்தனை காலமாக நீங்கள் என்னை ஒரு நடிகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்று முதல்முறையாக ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன். இயக்கம் என்பது எனக்குள் எப்போதும் ஒரு அமைதியான கனவாக இருந்தது. சொல்லப்போனால், அது ஒரு தொடர்ச்சியான தட்டல்தான் இது. நான் இந்தப் படத்தை எனக்காக எழுதினேன். ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வழக்கமான ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல.
பெரிய பட்ஜெட்டில் ஹீரோ பறக்கும் காட்சிகளோ, மெதுவாக நடக்கும் காட்சிகளோ இந்தப் படத்தில் இருக்காது. நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான்தான் ஹீரோ கிடையாது. கதையேதான் ஹீரோ. அந்தக் கதை எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
திரையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொந்தமானது. எனது படத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் உங்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு படத்தைத் தான் நான் உருவாக்க முயன்றேன். நடன ரியாலிட்டி ஷோக்களில் 'நீங்கள் வெறும் நடனமாடவில்லை - ஒரு கதையைச் சொல்கிறீர்கள்' என்பதுதான் எனக்கு பலமாக இருந்தது.
அது எனக்கு பெரிய அர்த்தம் தந்தது. ஏனெனில் அந்த நடனங்களுக்கான பெரும்பாலான கதைகள் - கருத்துகள் - என்னிடமிருந்து உருவானவைதான். அந்த நடன ஒத்திகை அறைகளில்தான் எனக்குள் படைப்பாற்றல் இருப்பதை உணர்ந்தேன். முன்பு பார்த்திராத, யாரும் ஆராயாத ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இது புதியது, பரபரப்பானது, மேலும் உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தை நீங்கள் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என பேசினார்.
சிம்புவுடன் இணைந்த கயாடு லோகர்!
சிம்புவின் 49-ஆவது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. சிம்புவுடன் கயாடு லோகர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களை தாண்டி படத்தில் சிம்புவுடன் சந்தானமும் முக்கியக் கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
கடைசியாக சிம்புவுடன் 'இது நம்ம ஆளு' படத்தில் இணைந்து நடித்திருந்தார் சந்தானம். அதன் பிறகு சந்தானம் நடித்த 'சக்கப் போடு போடு ராஜா' படத்திற்கு சிம்பு இசையமைத்திருந்தார். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைவதால் பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. சிம்புதான் தனது 'மன்மதன்' படத்தில் சந்தானத்தை அறிமுகப்படுத்தினார்.
அதனால் அவர் மீது சந்தானத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். வேறு எந்த ஹீரோ படத்திலும் நடிக்காத சிம்பு, அவர் அழைப்பின் பேரில் இந்தப் படத்துக்கு வந்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தை 'பார்க்கிங்' படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
கல்லூரி பின்னணியை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கவிருக்கிறாராம்.படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 50-ஆவது படத்திற்கும் மனோஜ் பரமஹம்சாதான் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படப் பூஜையில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.