'ரியாலிட்டி ஷோ மூலம் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், ஷோவை தொகுத்து வழங்கியிருந்தாலும், போஜ்புரி இசைத் துறையில் பிரபலமாக இருந்தாலும், பத்து ஆண்டுகளாக நான் ஒரு தொழில்முறை போஜ்புரி நடிகையாக இருந்தாலும், போதிய அளவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் வாயிலாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறந்த வாய்ப்பு கிடைத்தது. என்னதான் சிறப்பாகப் பாடினாலும், மும்பைக்குச் சென்று தேர்வில் கலந்து கொள்கிறபோது நம்மைவிடத் திறமைசாலிகள் பலர் இருக்கின்றனர்' என்கிறார் பீகாரைச் சேர்ந்த முப்பத்து ஏழு வயதான தீபாலி ஸகாய்.
ஒட்டுமொத்த நாடும் முணுமுணுக்கும் பாடலாக மாறியிருக்கும் 'தேரே பாஸ் மெய்ன்' என்ற பாடல் மூலம் அவரை அறிமுகம் செய்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
'ஜப் வி மெட்' வெற்றிப்பட இயக்குநர் இம்தியாஸ் அலியின் 'மெய்ன் வாபஸ் ஆவூங்கா' திரைப்படம் ஜூன் 12-இல் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து, காதலியைத் தேடி வரும் காதலனின் கதை இது. வழக்கம்போல் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றன.
'தேரே பாஸ் மெய்ன்' பாடல் முழுவதிலும் நடக்கும் உவமைகளின் ஊர்வலம், 'கஜல்' வகையின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கிறது. உணர்வுபூர்வமான குரலால் 'தேரே பாஸ் மெய்ன்' பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கும் தீபாலி ஸஹாய் மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்.
தனது இசைப் பயணத்தின் மிகப் பெரிய மைல் கல்லை எட்ட பல ஆண்டுகால விடாமுயற்சியில், தாமதமாக வெற்றியை அடைந்துள்ள தீபாலி ஸகாய் கூறியது:
'இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. 'இந்தியன் ஐடல் 3' நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், பின்னணிப் பாடல் துறையில் ஜொலிக்க முடியவில்லை. 19 ஆண்டுகள் கழித்து எனது முதல் பாலிவுட் பாடலைப் பாடியுள்ளதால், என் நீண்ட நாள் கனவு நனவானது.
'ஏதோ ஒரு அசாதாரணமான விஷயம் நடக்கப் போகிறது' என்பதற்கான முதல் அறிகுறி, ஏ.ஆர். ரஹ்மான் என்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடரத் தொடங்கியபோது அறிந்தேன். அவரது பிறந்த நாளும் எனது பிறந்த நாளும் ஜனவரி 6. 2026 பிறந்த நாளில் ரஹ்மான் குழுவினரிடமிருந்து எனக்கு இன்ஸ்டாகிராமில் வந்த செய்தியில், 'பாடலுக்காக உங்கள் குரலைப் பதிவு செய்ய ரஹ்மான் ஸார் விரும்புகிறார்' என்று கூறினர். பாலிவுட் தொடர்பு ஏதுமில்லாத நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். அந்தத் தருணம் 'நம்ப முடியாத ஒரு கனவு' போல இருந்தது.
ஒரு மாதத்துக்குப் பின்னர் 'தேரே பாஸ் மெய்ன்' பாடலைப் பதிவு செய்ய சென்னையில் உள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஸ்டூடியோவுக்கு வந்தேன். பாடலின் முதல் பதிப்பை நான் பாடினேன். அந்தப் பதிப்பை ஆறு மாதங்கள் மெருகேற்றினர். வரிகள் மாற்றப்பட்டன. மீண்டும் பாடினேன். பாடத் தொடங்கி சில மாதங்கள் ரஹ்மானை சந்திக்க முடியவில்லை.
சில தருணங்களில், பாடகர்கள் ஒரே இரவில் மாற்றப்படுவார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது குரல் பாடலாக வெளிவருமா? வராதா? என்று அச்சமுற்றேன்.
பாடலின் டிரெய்லர் வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவு என்னை முற்றிலும் புதிய பாணியில் அந்தப் பாடலைப் பாடுமாறு சொன்னார்கள். அந்தப் புது வடிவம் வெளியான உடனேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பாடல் இறுதி வடிவம் பெற்றவுடன் ரஹ்மானை சந்தித்து, பாராட்டுகளைப் பெற்றேன்.
'இந்தியன் ஐடல் 16' நிகழ்ச்சியில் ரஹ்மான் தனக்குப் பிடித்தமான பாடலாக 'தேரே பாஸ் மெய்ன்' என்ற பாடலைக் குறிப்பிட்டபோது, எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இத்தகைய மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க வேண்டும்' என்கிறார் தீபாலி ஸகாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







