பொ.ஜெயச்சந்திரன்
'ஓவியத்தில் கைவண்ணம் பிரதானமாக இருந்தாலும், அதைவிட உணர்ச்சி முக்கியம். காண்போரின் மனதில் ஏதாவது உணர்வை அது ஏற்படுத்த வேண்டும். ஓவியங்கள் பேச வேண்டும், அது ஒரு கதையைச் சொல்ல வேண்டும். ஓவியம் என்பது வெறும் தொழில் அல்ல; அது என்னுடைய உணர்வு.
கடல் கடந்து வாழும் தமிழர்களையும், கலாசாரத்தையும் இணைக்கும் பாலமாக ஓவியம் இருக்கிறது. மக்களிடம் பாரம்பரியத்தின் மீது இன்னும் பெரும் ஈர்ப்பு உள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் தங்களது வேர்களை அறிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்கிறார், மலேசியாவில் ஓவியப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றும் வள்ளி சேவுகன்.
மலேசியாவின் கோலாலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாசார மையத்தில் 'பொன் ஓவியம் 2' என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி மே 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நூற்றுக்கணக்கானோர் ரசித்த இந்தக் கண்காட்சி குறித்து வள்ளி சேவுகன் கூறியது:
'நான் பிறந்தது காரைக்குடியில். ஆனால், அதிக ஆண்டுகள் சென்னையில் இருந்தேன். அங்கே தான் இளங்கலை வணிகவியல் முடித்தேன். கணவரின் மருத்துவப் படிப்புக்காக தஞ்சாவூரில் இருந்தோம். அதன்பின் மலேசியா வந்து முப்பது ஆண்டுகளாகிவிட்டன. என்னுடைய ஓவியக் கலைக்கு முன்னோடி தாய் உமா.
தமிழ்நாட்டில் இருக்கும்போது, தஞ்சை ஓவியங்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஓவியர் சேகர் மாஸ்டரிடம் முறையாக இக்
கலையைக் கற்று மற்றவர்களுக்குப் பயிற்சி வழங்கினேன். இயற்கைச் சூழல், கோயில்கள், பாரம்பரிய இடங்கள், திருவிழாக்கள் ஆகியவை என் கலை உணர்வை அதிகரிக்கச் செய்தன.
பெண்கள் கலைத்துறையில் அதிகமாக வரவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறேன். பள்ளி, கல்லூரி மாணவியர் அதிகளவில் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். கலைத்துறையில் நிலைத்து நிற்பது எளிதல்ல. எந்தக் கலையிலும் பொறுமையும், முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன்.
நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் வரைந்துள்ளதால் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' எனக்கு சான்றிதழ் அளித்துள்ளது. ஒடிஸா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்த இந்திய வம்சாவளியினர் தஞ்சை கலை ஓவியங்களை மலேசியாவிலேயே படிக்க விரும்புகின்றனர். இங்கு என்னைப் போன்று நிறைய கலை ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் பயிற்சி பெறுகின்றனர்.
ஓவியக் கண்காட்சி: முதல் கண்காட்சி கிட்டத்தட்ட 9ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. மறுபடியும் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்துள்ளனர். வணிக நோக்கமின்றி கலையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஓவியம் வரைவதற்கான பலகை மட்டும் இங்கு கிடைக்கிறது. மற்ற பொருள்கள் இந்தியாவில் இருந்துதான் கொண்டு வருகிறோம். இது பெரிய சவாலாகத்தான் உள்ளது.
சொந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், நம்முடைய கலாசார பிரதிபலிப்புகளை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்க்க வேண்டும் என்பதே இந்த ஓவியக் கண்காட்சியின் முக்கிய நோக்கம்'' என்கிறார் வள்ளி சேவுகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






