கங்குலியின் பயோபிக்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான செளரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் பயோபிக் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் தொடங்கியிருக்கிறது. கங்குலியின் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்து வருகிறார்.
'தாதா: தி செளரவ் கங்குலி ஸ்டோரி' என்று இப்படத்துக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. கங்குலியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அவரது கிரிக்கெட் பயணத்தோடு தொடர்புடைய முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தத் திட்ட
மிடப்பட்டுள்ளது. கங்குலியின் பெஹாலா இல்லத்தில் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
இதில் நடிகர் ராஜ்குமார் ராவ் சிவப்பு நிற ட்ராக்சூட் அணிந்து இளம் வயது 'தாதா'வாக நடித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஐபிஎல் சீசனின் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மைதானத்துக்குள் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனைகள் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்சியைக் கழற்றி அவர் கொண்டாடிய வரலாற்றுத் தருணம் உள்ளிட்ட பல முக்கியக் காட்சிகள் இங்குப் படமாக்கப்படவுள்ளன.
பெஹாலாவில் உள்ள தனது இல்லத்திலும், ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் படப்பிடிப்பு நடந்தபோது செளரவ் கங்குலி நேரில் வந்து படக்குழுவினரைச் சந்தித்துள்ளார். விக்ரமாதித்யா மோத்வானே இயக்கும் இத்திரைப்படத்துக்குப் பிரபல இசையமைப்பாளர் ப்ரிதம் இசையமைக்கிறார்.
கங்குலியின் மனைவி டோனா கங்குலியின் இளம் வயது கதாபாத்திரத்தில் சோனார்பூரைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீஜாவும், அவரது முதிர்ந்த கதாபாத்திரத்தில் தான்யா மணிக்தலாவும் நடிக்கிறார்கள். மேலும், கங்குலியின் தாயாராக அபராஜிதா அத்யாவும், தந்தையாக சாஸ்வதா சாட்டர்ஜியும் நடிக்கிறார்கள்.

கங்கனா
சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2026 சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி, ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து, முதலிடம் பிடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.
ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் சூர்யவன்ஷிக்கு நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து ஊடகத்துக்குப் பேட்டி அளித்த கங்கனா, 'நான் உண்மையிலேயே சூர்யவன்ஷியை மனதார வாழ்த்துகிறேன்.
இவர் நாட்டுக்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் மீது நெருக்கடியைச் சுமத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. அவர் சிறப்பாக விளையாடுகிறார். உலகக் கோப்பை போன்ற பெரிய வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

கங்கனா - ESHAAN GIRRI
முடிவில்லாத ஓட்டப் பந்தயத்தில் இருந்தேன் - சமந்தா!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவின் நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நடிகை சமந்தா தனியார்செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.
அதில், 'ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய இடம் கிடைத்ததும், ரசிகர்கள் திரையில் என் பெயரைப் பார்த்துக் குரல் கொடுப்பதும் மிகுந்த பரவசம் தந்தது. அதுதான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது.
ஒருகட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிப்போனது. மேலும், ஒரு வருடத்தில் அடுத்தடுத்து நடித்த 5 படங்களும் ஹிட்டானதால், என்னை 'அதிர்ஷ்டக் கால்' கொண்டவர் எனப் பாராட்டினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் தன் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல், வெறும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன்.
எனது திரை ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல படங்களிலும் நடித்திருக்கிறேன். 2012-ஆம் ஆண்டில், எனது திரைப்பயணம் தொடங்கிய 15 நாள்களிலேயே உடல்நலக் குறைவால் படுக்கையில் விழ நேரிட்டது.
ஆனால், அந்த முதல் இடைவெளியில் இருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகும் ஆண்டுக்கு 5 முதல் 6 படங்கள் எனத் தொடர்ந்து ஓடிக்கொண்டேதான் இருந்தேன். அப்போது வசூலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். நான் திரைத்துறையில் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த இரண்டாவது இடைவெளி வந்தது.
நடிகர்களாக இருக்கும்போது நமக்கு ஓய்வே கிடையாது என்ற ஓர் அகம்பாவம் வந்துவிடுகிறது. ஆனால், இந்த நோய் பாதிப்பு என் எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றியது. மீண்டும் சினிமாவுக்குத் திரும்பினால், பழைய வாழ்க்கைப் பாணியை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே பிராண்டுகள், திரைப்படத் தேர்வுகள் என எல்லாவற்றையும் மாற்றி, தற்போது எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன். இப்போது என் வாழ்க்கையை ஒரு தெளிவான நோக்கத்தோடு வாழ்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலிவுட் ஸ்டூடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் செளரவ் கங்குலி!

கோலிவுட் ஸ்டூடியோ!

தாதா - சௌரவ் கங்குலி பயோபிக் திரைப்படத்தின் முதல் போஸ்டர்!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



