திறனாய்வு நோக்கில்... பதில்! நாளை நான் ஐஏஎஸ்!
உழுவோர் ஏர் பிடித்தால் குறு வித்து பயிராகும். உலகோர் நூல் பிடித்தால் சிறு பூக்கள் சரமாகும். உலை மூடி காத்திருந்தால் நெல்லரிசி உணவாகும். உளம் ஒன்றிப் படித்திருந்தால்,அது வெற்றிக்கு உரமாகும்.


உழுவோர் ஏர் பிடித்தால் குறு வித்து பயிராகும். உலகோர் நூல் பிடித்தால் சிறு பூக்கள் சரமாகும். உலை மூடி காத்திருந்தால் நெல்லரிசி உணவாகும். உளம் ஒன்றிப் படித்திருந்தால்,அது வெற்றிக்கு உரமாகும்.
நீங்கள் படித்துக் கொண்டே இருங்கள். வெற்றியைப் படைத்துக் கொண்டே இருக்கலாம். இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளில் முதன்மைத் தேர்வினை எழுதும்போது கேள்விகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அக்கேள்விகளில் உள்ள KEY WORDS எவை என்பதனை சரியாக முடிவு செய்ய வேண்டும். பின்பு பதிலைக் கட்டமைத்திட வேண்டும்.
பொதுவாக வினாக்களில் Examine, Discuss, Analyse, Evaluate, Elucidate, Explain, Elaborate, Illustrate, Justify, Comment போன்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மேலும், Examine, Analyse, Assess என்ற வார்த்தைகளோடு Critically என்ற வார்த்தை சில கேள்விகளில் சேர்க்கப்பட்டிருக்கும். அதாவது Critically Examine, Critically Analyse, Critically Assess என்று கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த வார்த்தைகள் நாம் எப்படி பதிலை எழுதவேண்டும் என்பதற்கான திறவுகோல்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருவிதமான கட்டமைப்பில் விடைகள் அமையும். முழுமையாக இதனை உள்வாங்காமல் எழுதப்படும் பதில், கேள்விக்கான பதில்களாக அமைவதில்லை. எதிர்பார்க்கும் மதிப்பெண்களும் கிடைப்பதில்லை.
Discuss - விவாதிக்கவும். முடிவை எடுக்கும் முன் அதுபற்றி விவாதிக்கின்றோம். அதன் பிறகு முடிவை எடுக்கின்றோம். இந்த வகையில் இதற்கான பதில் அமைய வேண்டும். Comment - கருத்துரை என்ற வார்த்தை ஒரு நடுநிலையோடு கூர்ந்துநோக்கி, உனது பார்வையில் நிறை, குறைகளை எடுத்துக்காட்டுகளோடு, அல்லது வரைபடங்களோடு அல்லது தரவுகளோடு அல்லது கற்பனைகளற்ற உண்மைகளோடு (Facts) அல்லது இவை அனைத்தையும் கொண்டு கருத்துரைக்கவும். இந்த வகையில் இதற்கான பதில் எழுதப்படவேண்டும்.
Analyse - என்ற வார்த்தை ஆராய்க அல்லது கூர்ந்து நோக்குக என்பதையும், Evaluate - என்ற வார்த்தை ஒன்றைப் பற்றிய ஆதாரத் தகவல்களை ஆராய்ந்து பின்னர் அதனை மதிப்பிட்டு எழுது என்பதையும், Elucidate, Explain - என்ற வார்த்தைகள் இந்தக் கருத்தினை, நிகழ்வினை விளக்கமாக எடுத்துரை அல்லது விரிவாகக் கூறு அல்லது மேலும் விவரமாக எடுத்தெழுது அல்லது விரிவாகக்கூறி தெளிவுபடுத்து என்பதையும் குறிக்கும். இதற்கான கட்டமைப்பில் விடைகள் தரப்பட வேண்டும்.
Illustrate - என்ற வார்த்தை எடுத்துக்காட்டுகள் மூலமாக, வரைபடங்கள் மூலமாக இதனை தெளிவுபடுத்து அல்லது விளக்கிக்கூறு என்பதையும், Justify - என்ற வார்த்தை இக்கருத்தினை நியாயப்படுத்து அல்லது சரியான காரணமாக்கு என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.
Critically என்ற வார்த்தை இணைக்கப்படும்போது அக்கேள்விகளுக்கான பதில்கள் திறனாய்வு நோக்கில் நிறைகுறைகளை ஆழமாக விவரிக்கின்ற நோக்கில் அமைந்திட வேண்டும். தற்போது ஒரு நடப்பு நிகழ்வின் பின்புலத்தினைப் பார்ப்போம்.
கடந்த 22.10.2015 இல் ஆந்திர மாநிலம் அமராவதியில், அம்மாநிலத்திற்கான புதிய தலைநகர் உருவாக்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது நடப்பு நிகழ்வாகும். இந்நிகழ்வுக்குப் பின்புலமாக வரலாற்றினையும், இந்திய அரசியலமைப்புப் பாடத்தினையும் நாம் எடுக்கலாம்.
வரலாற்றில் இதற்கான குறிப்புகளை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:
மெளரியர்களுக்குப் பிறகு தென்னிந்தியாவில் தனி அரசுகள் அமையும் போது இப்பகுதி சாதவாகனர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் இஷ்வாகு மன்னர்கள், சிலகாலம் பல்லவர்கள், ஆண்டனர்.
கி.பி.பதினோறாம் நூற்றாண்டு முழுவதும் இப்பகுதி பிற்கால சோழர்களின் கட்டுப்பாட்டில் அவர்களது ஆளுகைக்குக் கீழ் இருந்தது.
கி.பி.1336 ஆம் ஆண்டு ஹரிஹரர் மற்றும் புக்கர் என்ற சகோதர்கள் விஜயநகர அரசினை நிறுவினார்கள். இவர்கள் தலைநகராக துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு நகரை நிர்மானித்தார்கள். அந்நகர் விஜயநகர் அல்லது வித்யாநகர் என்று பெயரிடப்பட்டது. அவர்களுக்கு வழிகாட்டிய வித்யாரன்யா என்ற துறவியை பெருமைப்படுத்தும் விதமாகவே வித்யாநகர் என்ற பெயரும் சூட்டினார்கள். இவர்களது அரசு விஜயநகரப் பேரரசில் "சங்கம வம்ச அரசு' எனப்பட்டது.
இச்சகோதரர்கள் இருவரும் வாரங்கல்லை ஆட்சி செய்த காகாத்திய வம்ச அரசர்களிடம் கருவூல அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்.
இந்த விஜயநகரம் தற்போது சிதிலமடைந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி நகர் அருகில் உள்ளது. வாரங்கல் தற்போது ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாநிலமான தெலங்கானாவில் அமைந்துள்ளது.
விஜயநகர அரசைப் பற்றி எழுதப்பட்ட, அடிக்கடி வினாக்களில் கேட்கப்படும் ஒரு நூல் A Forgotten Empire ஆகும். இதனை எழுதியவர் Robert Sewell ஆவார்.
விஜயநகர அரசில் தொடர்ந்து சளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் போன்ற அரசுகள் ஆட்சி புரிந்தன. இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சியில் அளப்பரிய பங்கு இவர்களுடையது.
பல்வேறு அரசர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் வந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது 1920ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாக்பூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கியவர் விஜயராகவாச்சாரியார் ஆவார். இவர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய முதல் தமிழர் என்ற பெருமைக்குரியவர். இம்மாநாட்டில்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...