/

சொந்தத் தொழில் செய்ய விருப்பமா? காகித கப் காத்திருக்கிறது!

திருமணம் உள்ளிட்ட பல விழாக்களில் தண்ணீர் அருந்துவதற்கும், காபி, டீ, பாயசம் அருந்துவதற்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக காகித கப் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

News image
Updated On :21 செப்டம்பர் 2015, 3:34 pm

திருமணம் உள்ளிட்ட பல விழாக்களில் தண்ணீர் அருந்துவதற்கும், காபி, டீ, பாயசம் அருந்துவதற்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக காகித கப் தற்போது பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் காகித கப்பிற்கான தேவை பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏதாவது சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று பல இளைஞர்கள் நினைப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். ""காகித கப் தயாரிப்புத் தொழிலைச் செய்து மாதம் ரூ 25ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்'' என்கிறார்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காகித கப் தயாரிப்புத் தொழிலைச் செய்து வரும் ஆர்.சரவணபிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் ஆர்.ரமேஷ்குமார்.

இந்தத் தொழில் குறித்து இருவரிடமும் கேட்டபோது:

""கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தொழிலை தொடங்கினோம். பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறிவந்த வேளையில் மாற்றுப் பொருளாகக் காகித கப் மட்டுமே இருக்க முடியும் என முடிவு செய்து நாங்கள் தயாரிப்புத் தொழிலை தொடங்கினோம். காகித கப் தயாரிக்க தரமான காகிதம், நேர்த்தியான அச்சு, பஞ்சிங், மற்றும் ஒட்டுவேலை செய்ய வேண்டும். தொடக்கத்தில் 110 மி.லி., 150 மி.லி. கொள்ளளவுள்ள கப்களைத் தயாரித்தோம்.

நாங்கள் தொழிலைத் தொடங்கு முன்னர் சிவகாசியில் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள்தாம் செய்து வந்தனர்.

காகித கப்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் தேவை அதிகரித்தது. நாங்கள் தற்போது 50மி.லி., 80.மி.லி., 40மி.லி., ஐஸ் கிரீம் கப்கள், 210மி.லி. தண்ணீர் கப்கள் தயாரித்து வருகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் இதன் தேவை 10 முதல் 20 சதம் வரை அதிகரிக்கிறது.

மூலப்பொருள்களின் விலையும் அதுபோல ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 20 சதம் வரை அதிகரித்து வருகிறது.

தற்போது புதிய தொழில் நுட்பத்தில் பஞ்சிங் இயந்திரம் வாங்கியுள்ளோம்.

ஓர் இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் கப்கள் தயாரிக்க இயலும்.

சொந்தமான இடம், இயந்திரம் இருந்தால் பெண்களும் கூட இந்தத் தொழில் மூலம் மாதம் ரூ. 25 ஆயிரம் சம்பாதிக்க இயலும்.

தரம், குறித்த நேரத்தில் சப்ளை ஆகியவற்றின் மூலம் போட்டிகளைச் சமாளிக்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் கப்களின் விளிம்பினை இயந்திரம் மூலம் உருட்டுவதற்கு, அரசு விதித்துள்ள விதிகளின்படியே பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.

மூலப்பொருகளை வாங்குவது, இயந்திரத்தில் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துகிறோம்.

நாங்கள் மூலப்பொருள்களை ரொக்கப் பணம் கொடுத்து வாங்குவதால்,விற்பனை செய்யும் போது கடன் கொடுப்பதில்லை.

கப்கள் தயாரிக்க தற்போது வெளிநாட்டுக் காகிதங்கள் வந்துவிட்டன. சிவகாசியில் மாதம் 2500 டன் காகித கப்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

நாங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சந்தைப்படுத்தி வருகிறோம்.

இந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கு மிகவும் வாய்ப்புக் குறைவு.

இளைஞர்கள் இந்தத் தொழிலில் தைரியமாக ஈடுபடலாம்.

புதிதாகத் தொழிலில் இறங்குபவர்கள் சந்தை வாய்பை கவனித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக மிகுந்த கவனத்துடன் இந்தத் தொழிலைச் செய்து வந்தால் வெற்றி பெறலாம். தற்போது கைப் பிடியுள்ள காகித கப்கள் சந்தைக்கு வந்துவிட்டன. வரும் காலத்தில் கைபிடியுள்ள கப்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

காகித கப்களுக்கு வெளிநாட்டிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது''  என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.