சொந்தத் தொழில் செய்ய... தேவையில்லை... அதிக மூலதனம்!
இந்தியா மட்டுமல்ல... உலக நாடுகள் அனைத்துமே தங்கள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல்


இந்தியா மட்டுமல்ல... உலக நாடுகள் அனைத்துமே தங்கள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. இதனால், தனிநபர் வருமானத்தோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் மட்டுமே அனைவருக்கும் வேலை வழங்கிவிட முடியாது.
எனவே, திறமையுள்ள, ஆர்வமுள்ள அனைவரும் சொந்தமாகத் தொழில் தொடங்கி தங்களுக்கான வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். துடிப்புள்ள தொழில்முனைவோர் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதார வளர்ச்சியில் முக்கிய செல்வாக்கு செலுத்துவோராக உள்ளனர்.
ஒரு புதிய தொழில் தொடங்குவோர் அவர்களது குடும்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்காக மட்டுமே உழைப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால், அவர்கள் உழைப்பின் ஊடாக உள்ளூர் சமூகம் தொடங்கி, மொத்த நாடும் பயனடைந்து வருகிறது என்பதே உண்மை. பணம் சம்பாதிப்பதிலும், அதைப் பகிர்ந்து கொள்வதிலும் தொழில்முனைவோர் ஈடுஇணையற்றவர்களாக உள்ளனர். இவர்கள் தொழில் தொடங்கும்போது தங்களின் பணத்தோடு, மற்றவர்களிடம் முதலீடு, கடன் பெற்று திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்றனர். இதில் அவர்கள் அடையும் வெற்றி, லாபம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்த மக்களும் பயனடையச் செய்கின்றனர்.
ஒருவர் தொழில்முனைவோராக மாறும்போது, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் வேலைதேடும் ஒருவர் குறைந்து, பலருக்கு வேலை கொடுக்கும் ஒரு தொழிலதிபர் உருவாகிறார். இந்த வகையான வேலை உருவாக்கம் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை இலக்குகளில் ஒன்றாக உள்ளது.
தொழில்முனைவோர் சீரான பிராந்திய வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றனர். ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுவதன் மூலம் பின்தங்கிய ஒருபகுதி வளர்ச்சியடைய தொழில்முனைவோர் உதவுகின்றனர். குறிப்பாக, தொழிற்சாலைகள் உருவாவதன் மூலம் அந்தப் பகுதியில் நல்ல சாலைகள், ரயில்பாதைகள், விமான நிலையம், தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், பள்ளிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பொதுத்துறை, தனியார் சேவைகள் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு வசதிகள் எளிதாக கிடைக்கின்றன.
பின்தங்கிய பகுதிகளில் தோன்றும் ஒவ்வொரு புதிய வணிக நிறுவனமும் நேரடியான, மறைமுகமான எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, அந்த பிராந்தியத்தின் பொருளாதாரம் உயர பல வழிகளில் உதவுகின்றது. இந்தியாவில் சுமார் 4 கோடி அலகுகளை உள்ளடக்கிய ஙநஙஉ செக்டார் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தொழில்முனைவோர் வேலையை உருவாக்குபவர்களாக மட்டுமல்லாமல், அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் வாழ்க்கைத்தரம் உயரவும் அவர்கள் உதவுகின்றனர். தொழில்முனைவோர் தாங்கள் உற்பத்தி செய்யும் அதிகப்படியான பொருள்களை ஏற்றுமதி செய்து தொழிலை விரிவுபடுத்துகின்றனர். இதன்மூலம் அவர்கள் நாட்டுக்கு பெருமளவிலான அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருகின்றனர். இந்த அந்நியச் செலாவணி உள்நாட்டு பொருளாதார சரிவின்போது நாம் பொருளாதாரத்தில் நிலைத்திருக்க வழிவகை செய்கிறது.
திருபாய் அம்பானியால் ரூ. 50 ஆயிரம் முதலீட்டில் சாதாரணமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம் இன்று இந்தியாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்து விட்டது. அதேபோல, பெண் தொழில்முனைவோரான கிரண் மசூம்தார்சா ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கிய BIOCON என்ற Biopharmaceutical நிறுவனத்தில் இன்று 6400-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் நமக்கு அறிமுகமான சில உதாரணங்களே. பெரும்பாலானோர் தொழில் தொடங்க தயங்குவதற்குக் காரணம் பெரிய முதலீடு தேவைப்படும் என்பதால்தான். அதற்கான அவசியம் இல்லை. சிறிய மூலதனம், நல்ல வழிகாட்டுதல், உழைப்பு, குழுப் பணி போன்றவையே வெற்றிக்கான படிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...