

அமெரிக்கா-இந்தியா கல்வி அறக்கட்டளை (United States}India Educational Foundation - USIEF) இணைந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடத்தும் ஆசிரியர்களுக்கான கூட்டுப் பயிற்சிக்காக தில்லியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Fulbright Teaching Fellowship எனப்படும் இந்த விருதுத் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இந்த 6 ஆசிரியர்கள் மட்டும் தேர்வாகியுள்ளனர்.
தில்லி அரசு கல்வித் துறையின் 2017 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுபெற்ற சமூக அறிவியல் ஆசிரியர் முராரி ஜா மற்றும் ஆங்கிலத் துறை வழிகாட்டு ஆசிரியைகள் மனு குலாதி, தீப்தி சாவ்லா, கணித வழிகாட்டு ஆசிரியை அஞ்சு பதாக், சிறப்பு ஆசிரியை ஸ்டுடி கெளர், மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியை மனிஷா பாவி ஆகியோர் இந்த சிறப்புப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
அமெரிக்க மக்களுக்கும், பிறநாட்டு மக்களுக்குமான பரஸ்பர புரிதலை ஊக்குவித்த அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
J.William Fulbright-ஐ கெளரவிக்கும் வகையில், அவரது பெயரால் The Fulbright Teaching Excellence and Achievement Programme (FTEA) என்ற திட்டம் அமெரிக்க அரசால் செயல்படுத்தப்படுகிறது.
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள், ஐரோப்பா மற்றும் யுரேஷியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட 160 நாடுகளைச் சேர்ந்த சுமார் 177 பள்ளி ஆசிரியர்கள், தங்களுடைய பாடத்தில் நிபுணத்துவம் பெறவும், கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், அமெரிக்கா குறித்த அதிக புரிதலைப் பெறவும் இந்தத் திட்டத்தை அமெரிக்கா பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற தேர்வாகும் ஆசிரியர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்று, சுமார் 40 நாடுகளில் இருந்து தேர்வாகி வரும் பலதரப்பட்ட ஆசிரியர்களுடன் இணைந்து, அமெரிக்க பல்கலைக்கழகப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்களுடன் 6 வாரங்கள் தங்கி, அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வாய்ப்பையும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுவர்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு கற்பித்தல் முறைகள், கற்பித்தல் உத்திகள், பாடத்திட்டங்கள், பாடத்திட்ட வளர்ச்சி, அறிவுசார் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட பயிற்சிகளும், விருப்பப்படுவோருக்கு கூடுதல் பயிற்சியாக தீவிர ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், அமெரிக்க பல்கலைக்கழகப் பள்ளிகளில் அங்குள்ள
வகுப்பறைச் சூழலில், அந்தப் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து வகுப்பு எடுக்கும் 40 மணிநேர செய்முறை உள்ளடங்கிய கல்விப் பயிற்சி, பயிற்சி முழுவதும் விளையாட்டு, கலை போன்ற கலாசார செறிவூட்டல் நிகழ்ச்சிகள், வழிகாட்டுதல் பயிற்சிகள் இந்தத் திட்டத்தின் சிறப்புகளாகும்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
பல்வேறு நாட்டிலிருந்து வரும் ஆசிரியர்கள், பிறநாட்டு ஆசிரியர்களுடன் கொள்ளும் பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பது, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஆரோக்கியமான சர்வதேச போட்டியைக் கட்டமைத்து ஊக்குவிப்பது, சர்வதேச அளவில் உள்ள சிறந்த பயிற்சி முறைகளை பரிமாறிக் கொள்வது, பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளின் ஆசிரியர்களை, ஆசிரியர் தலைவர்களாக உருவாக்குவதன் மூலம், அவர்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று அவர்களது அனுபவங்கள், திறன்களை உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்தந்த நாடுகளின் கல்வி வளர்ச்சிக்கு அமெரிக்கா பங்களிப்பது போன்றவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஆசிரியர்கள் முக்கிய கற்பித்தல் உபகரணங்கள் வாங்க, பிற ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க, திட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க பள்ளிக்கும், தங்களுடைய பள்ளிக்கும் இடையே கூட்டுத் திட்டங்களை செயல்படுத்த, கல்வி பரிமாற்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்வது போன்ற பிற நடவடிக்கைகளுக்காக சிறிய மானிய விருதைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 18 மாநிலங்களைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம், குறிப்பிட்ட பாடத்தில் இளநிலை பட்டம், ஆசிரியர் பயிற்சியில் பட்டம், சிறந்த ஆங்கில மொழித்திறன் மிக்க அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரும் மார்ச் 1 ஆம் தேதிக்குள் இந்த Fellowship திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் பட்டியல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும்.
இந்தத் திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு USIEF சென்னை மண்டல அலுவலகத்தின் திட்ட மேலாளரை 044-2857 4275 என்ற தொலைபேசி எண்ணிலும், usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.