புரியாதது... இல்லையென்றாகி விடாது! - 71

முழுமையாகக் குணப்படுத்த முடியாத ஏராளமான நோய்களைப் பார்க்கிறபோது, நோய்களின் தன்மைகளை விரிவாக ஆராய்ந்து, அவற்றை வேரிலிருந்து அகற்றக்கூடிய மருந்துகள் அல்லது மருத்துவ முறைகளின்
புரியாதது... இல்லையென்றாகி விடாது! - 71

முழுமையாகக் குணப்படுத்த முடியாத ஏராளமான நோய்களைப் பார்க்கிறபோது, நோய்களின் தன்மைகளை விரிவாக ஆராய்ந்து, அவற்றை வேரிலிருந்து அகற்றக்கூடிய மருந்துகள் அல்லது மருத்துவ முறைகளின் தேவை, இன்றைக்கு மிக மிக அதிகமாக உள்ளது. இன்னும் ஒருபடி மேலே சென்று, நோய்கள் வந்த பிறகு, அவற்றைக் குணப்படுத்த முயற்சி செய்வதை விட, முதலிலேயே நோய்கள் வராமல் தடுக்கும் முறையே உயர்ந்தது.

நோயெதிர்ப்பு அமைப்பு (Immune System) நம் உடலை, நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இந்த அமைப்பின் செயல்பாடு குறைவாக இருந்தால், நுண்ணுயிரிகள் பற்களைத் துலக்கும்போது கூட இரத்த ஓட்டத்தில் நுழைந்து நம்மைக்கொல்லக் கூடும். சில நேரங்களில் நோயெதிர்ப்பு அமைப்பு அளவுக்கு மீறி செயல்புரிந்து, தவறுதலாக நம் உடலையே தாக்குகிறது. சில நேரங்களில், இது தேவைக்குக் குறைவாகச் செயல்புரிகிறது. அப்போது மோசமான கிருமிகளுக்கும் நோய்களுக்கும் எதிராகப் பாதுகாக்க முடியாமல் தோல்வியடைகின்றது.

சைட்டோமெகாலோவைரஸ் (CMV-Cytomegalovirus) ஒரு பொதுவான வைரஸ். நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், உங்கள் உடல் வைரûஸ வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொள்ளும். CMV இருப்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் இது ஆரோக்கியமான மக்களுக்கு அரிதாகவே பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிகளுக்கு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துவிட்டவர்களுக்கு CMV - ஆல் பிரச்னை வரும். எனவே மிதமாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள ஒருவருக்கு, சைட்டோமெகாலோ வைரஸ் நோய்க்கிருமியைத் தடுக்க போதுமான நோயெதிர்ப்புச் சக்தியாக இருக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு நபரின் நோயெதிர்ப்பு செல்கள் அதிவேகத் தன்மையில் செயல்பட்டால், சைட்டோமெகாலோ வைரஸ், நோய்க் கிருமிகளைக் கொல்வதற்காக உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் அமைப்பையே ஆபத்தில் தள்ளக்கூடும். மிக குறைவாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் மிக அதிகமாக செயல்படும் அமைப்பு ஆகிய இரண்டுமே நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. அதை மேம்படுத்த அல்லது அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நமது திறன், நோயெதிர்ப்பு மண்டலத்தின் இரு அம்சங்களான உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு (Innate Immune System) மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு (Adaptive Immune System) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு (Innate Immune System): நச்சுகள், பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியன உடலில் நுழைந்தவுடன் அவற்றை முதன்முதலில் கண்டறிந்து, பாதுகாப்புத் தாக்குதலில் இறங்குவது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு ஆகும். அது மட்டுமல்ல, உடலில் காயங்கள் ஏற்பட்டாலோ, தாக்குதல் நிகழ்ந்தாலோ முதலில் கைகொடுப்பது இந்த அமைப்புதான். செல்களை முடுக்கிவிட்டு, கிருமிகளைத் தாக்கி அழிப்பதற்கும், பாதிக்கப்பட்ட பாகங்களைச் சீரமைப்பதற்குமான செயல்களைச் செய்வது மட்டுமல்லாமல், தகவமைப்பு நோயெதிர்ப்பு (Adaptice Immunity) செயல்பாடுகளுக்காகவும் தயார்படுத்துகிறது.

இரண்டாவது கட்டம் - தகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு (Adaptive Immune System): தகவமைப்பு நோயெதிர்ப்பு செல்கள் தனித்திறன் கொண்டவை. மேலும், நோய்க்கிருமிகளை அடையாளம் காண, உள்ளார்ந்த நோயெதிர்ப்பு மண்டலத்தால் இந்த செல்கள் பல மடங்கு பெருகி படையெடுத்து கிருமிகளை அழிக்கும் முயற்சியைத்தொடங்கி, நோயிலிருந்து மீட்டு, மீண்டும் வராமல் உறுப்புகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தி, நோய் வருமுன் தடுப்பதற்கு போடப்படும் தடுப்பூசி நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளையும், அதன் தன்மைகளையும் நினைவில் வைத்துக் கொள்கிறது. பல நோய்களுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதால் பக்க விளைவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரமுடிகிறது. லூபஸ் (Lupus), முடக்கு வாதம் (Rheumatoid arthritis), மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple Scelerosis) ஆகியவை தன்னுடல் தாக்கும் நோய்கள்; இவற்றில் நோயெதிர்ப்பு அமைப்பு உடலைத் தவறாக தாக்குகிறது. நாள்பட்ட அழற்சி, நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் நியூரோ-டிஜெனரேடிவ் நோய் போன்ற பல நோய்கள் நோயெதிர்ப்பு அமைப்பின் அதீத வினைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

"நோயெதிர்ப்பு அமைப்பின் திறனுக்கு உங்கள் பிறப்பும், பரம்பரையும் காரணம் அல்ல - உங்கள் வாழ்க்கைமுறையே காரணம்' என்கிறது எஸ்தர் லாந்தூயுஸ் எழுதிய "அமெரிக்க அறிவியல்' (Scientific American) ஆராய்ச்சிக் கட்டுரை.

முன்னே சொன்ன மருத்துவமுறைகளெல்லாம், திறன் குறைந்த நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தேவை. சிலர் மட்டும் நோய்த்தொற்றுகள் அல்லது நோய் நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். உடலின் பாதுகாப்பு அமைப்பின் வலிமை, பரம்பரைரீதியானது என்ற தவறான நம்பிக்கையை இந்த புதிய ஆராய்ச்சி நிராகரிக்கிறது.

ஆரோக்கியமான 105 இரட்டையர் ஜோடிகளிலிருந்து இரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பை உருவாக்குவதற்கு முன்பும், பின்பும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் மற்றும் அவற்றின் ரசாயனத் தூதர்களை அளவிட்டனர். இந்த அளவுருக்களில் நான்கில் மூன்று பங்கு (3/4), உணவு மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளைத்தான் பெருமளவில் சார்ந்துள்ளது. காய்ச்சல் தடுப்பூசிக்கு உருவான நோயெதிர்ப்பு சக்திக்கும், மரபியலுக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஒரே மாதிரியான மரபணுவைக் கொண்ட ஒரே மாதிரியான இரட்டை உடன்பிறப்புகளில், நோயெதிர்ப்பு மண்டல அம்சங்கள் இளைய ஜோடிகளை விட, முதிய ஜோடிகளுக்குள் மிகவும் வேறுபடுகின்றன. 2015 ஜனவரி 15-ஆம் தேதி இங்ப்ப்- என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், நம் பெற்றோரிடமிருந்து அனுப்பப்பட்ட டி.என்.ஏ.-வை விட நமது வாழ்க்கை பழக்க வழக்கங்களும், உணவு முறை அனுபவங்களும்தான், நம் உடலின் நோய்க்கு எதிரான பாதுகாப்பை வடிவமைக்கின்றன என்று நிரூபிக்கின்றன.

சுற்றுச்சுழல், உணவு, பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போதுதான் நம்மை நோய் தாக்குகிறது. அந்த நோயைக் குணப்படுத்த தேவையான நவீன அலோபதி மருத்துவம் கண்டுபிடித்த ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி வைரல், ஆன்டி மலேரியல், ஆன்டி-ஃபங்கல் மற்றும் பல ஆன்டி பயாட்டிக்ஸ் போன்ற பல நவீன மருந்துகள் குணப்படுத்துகிற மருந்துகளாக இருக்கின்றன. ஆனால் வேறுபல நவீன அலோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்துவதை விட, நோயின் அறிகுறிகளை குணப்படுத்துவதாகவும், பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நீண்ட நாள் நோயாளிகளாக்கி விடுகிறது என்பதையும் முன்னர் பார்த்தோம். தவறான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளினால் விளையும் மனித மற்றும் பொருளாதார இழப்புகளையும் பார்த்தோம்.

இந்த சூழலில் தான் பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத நமது இந்தியப் பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள், மற்ற மாற்று மருந்துவ முறைகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து நோய்தீர்க்கும் மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நவீன அலோபதி மருத்துவ முறைக்கும், பாரம்பரிய இந்திய மற்றும் மாற்று மருத்துவமுறைகளுக்கும், அதன் நோய் தீர்க்கும் வல்லமைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அலோபதி நவீன மருத்துவ முறை "ஒற்றை மருந்து மூலப்பொருளை" (Single Component Active Pharmaceutical ingredient) அடிப்படையாகக் கொண்டது. மேலும் சில மருந்துகள் இரண்டு மற்றும் அரிதாக மூன்று கலவைகள் சேர்ந்ததாக இருக்கும். மறுபுறம், பாரம்பரிய மருத்துவமுறை பல இயற்கை மூலங்களை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் மிகக் குறைந்த செறிவுகளில் பல மூலிகைகளின் மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து செயல்படும் (synergistic multiple active principles) தன்மை
களைக் கொண்டிருக்கும்.

ஒரு மூலக்கூறு மூலம் உருவாக்கப்படும் நவீன அலோபதி மருந்து வளர்ச்சியின் பகுப்பாய்வு, மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வு நெறிமுறைகளை, பல மூலிகைகளில் இருந்து பல மூலக்கூறுகளின் மூலங்களை ஒருங்கிணைந்து செயல்படும் இந்திய இயற்கை மருத்துவத்திற்குப் பொருத்தி, நவீன மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு நெறிமுறைகளை அப்படியே பயன்படுத்தினால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று வலியுறுத்தும் மனநிலை இப்போது நம் நாட்டில் இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்பாட்டில், இயற்கை மருத்துவத்தின் இயற்கை மூலங்களின் ஒருங்கிணைந்த விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இந்தத் தவறான புரிதல் வித்திடுகிறது. மேலும், இயற்கை மூலத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட கூறுகளின் உறுதித்தன்மையோ அல்லது இயற்கை மருத்துவத்தில் செயலில் உள்ள கூட்டுக் கலவையின் தேவையோ அறியப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, பூச்சிகளின் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும் தடுக்கும் அசாடிராக்ட்டின் (Azadirachtin), வேப்ப மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது பூர்வீக மூலத்தில், வேப்பஇலையோடு இருக்கும் போது நிலையானதாக இருக்கிறது. ஆனால் அது வேம்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதும், அது ஒளி மற்றும் வெப்பத்தில் நிலையற்றதாக மாறிவிடுகிறது. விளைவு, தன்னுடைய செயல்திறனை இழக்கிறது. அதனால் அதன் உறுதித்தன்மையைப் பராமரிக்க நிலையான சூத்திரங்களை கண்டறிய வேண்டியிருக்கிறது.

எனவே பல்வேறு மூலிகைகளில் இருக்கும் ஏராளமான செயல்பாட்டு மூலக்கூறுகளை கண்டறிந்து, மிகக் குறைவான செறிவில் இருக்கும் ஒவ்வொன்றையும் தனிமைப்படுத்தி, அதன் விளைவுகளைத் தனித்தனியாகவும், வெவ்வேறு கலவைகளிலும் கண்டறிய வேண்டும் என்றால், அந்த முயற்சியில் பல வருடங்கள் கடந்து போகும்; வருடங்களோடு அதன் திசைகளும், அரசியல் நிலைப்பாடுகளும் மாறிவிடும். அதிகமாகத் தவறாகச் செலவிடப்பட்ட நேரங்கள், முயற்சிகளை நீர்த்துப் போகச்செய்யும். இது தோல்வியின் பாதையில் திருப்பி விடும். இந்த இடைப்பட்ட காலத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகள், மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்ற பன்னாட்டு வலிமை வாய்ந்த நவீன மருத்துவ சந்தையில், நவீன மருந்து பொருளாதார அரசியலில், காணாமல் போய்விட வாய்ப்புகள் ஏராளம்.

எனவே சும்மா இருக்காமல், செயல்படுவதற்கு நாம் முனைய வேண்டும்; இணைய வேண்டும். நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்த, பொக்கிஷங்களை, நம் எதிர்காலச் சமுதாயத்திற்கு பத்திரமாக விட்டுச் செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். தவறினால், எதிர்காலம் நம்மைத் தூற்றும்.
எனவே, நம் நாட்டு மூலிகைகளில் இருந்து நோயைக் குணப்படுத்தும் மூலக்கூறை பிரித்தெடுத்து செய்யப்படும் நீண்ட கால மருத்துவ ஆராய்ச்சி ஒருபுறம் நடக்க வேண்டும். அதே நேரத்தில் இயற்கை மூலிகை மூலப்பொருள்கள்- அதன் கலவை - நோய்தீர்க்கும் செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிய வேண்டும். நவீன மருத்துவ ஆய்வக முறைகளின் ஆராய்ச்சி நடைமுறைகளை - உலக ஆராய்ச்சிக்கு இணையான வகையில் உருவாக்கி, அத்தகைய மூலிகைகளை அவற்றின் பாதுகாப்பு மற்றும் நோய் தீர்க்கும் தன்மைகளை அனைத்து மருந்துகளிலும் பொதுவாக உருவாக்கும் வரைமுறையை ஒழுங்குபடுத்தி தரப்படுத்துவது இன்றைய தேவையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய மருத்துவத்தின் ஆணிவேரான ஒவ்வொருவரின் உடல்வாகுக்கேற்ற முறையில் நோய்தீர்க்கும் தனித்துவமான மருந்துகளை உருவாக்கும் வல்லமையையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவேதான், நவீன மருத்துவக் கண்டுபிடிப்பை சம்பந்தப்படுத்தும் இத்தகைய மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்திய மருத்துவத்திற்கு ஏற்ற ஆராய்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வு நிலை வரைமுறைகளை, உலக ஆராய்ச்சி வரைமுறை தத்துவத்திற்கு இணையாக உருவாக்கி, இந்திய மருந்துகளின் ஆராய்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அதிக முதலீடுகளை அரசு செய்தால் மட்டுமே, இந்திய மருத்துவ முறை மறுமலர்ச்சி பெற்று, பன்னாட்டுச் சந்தை பலத்தினால் ஒதுக்கப்பட்ட இன்றைய நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு, உலகத்திற்கு பக்கவிளைவுகள் இல்லா நோய் தீர்க்கும் மருத்துவத்தைக் கொடுக்க இயலும்.

இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம் 1970-இல் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, ஆயுஷிற்கான (AYUSH) தனி அமைச்சகம் 2014-இல் தான் உருவாக்கப்பட்டது. அதுவரை ஆயுஷ் என்பது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறிய துறையாக மட்டுமே இருந்தது.

பாரம்பரிய மருத்துவத்தின் ஒவ்வொரு முறையும் அதன் சொந்த பாணி, அறிவு மற்றும் நோய் தீர்க்கும் பொறிமுறையைக் கொண்டுள்ளது. மருத்துவ அறிவியலில் உடலியலில் நோய் தீர்க்கும் முயற்சியில் மிகக்குறைந்த வளர்ச்சியே கண்டிருக்கிறோம். வளர்ந்து வரும் விஞ்ஞான அறிவின் அளவைக் கொண்டு நம்மால் இதுவரை புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, இல்லை என்று கூற முடியாது.

இருநூறு ஆண்டுகளே ஆன அலோபதி மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, பல நூறு தலைமுறைகளாக நடைமுறையில் இருந்தபோதிலும், இது விஞ்ஞானத்தின் தற்போதைய அறிவால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது பொருத்தமான உயிரியல் நெறிமுறை அடிப்படையிலான சோதனை கிடைக்கவில்லை என்பதால் இது அறிவியல் சார்ந்ததல்ல என்று சிலரால் அறியாமையாலும், சிலரால் வணிக ரீதியாகவும் பரப்பப்படுகிறது.

அதை ஒழுங்குபடுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளை வரையறுக்க வேண்டும். நவீன அலோபதி மருத்துவம் கண்டறியாத கேள்விக்குறியோடு நிற்கும் பலநோய்களைக் குணப்படுத்துவதற்கும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய மருத்துவ வரலாற்று அறிவை நிரூபிப்பதற்கும், பல்வேறு நோய்களால் பெரும் இழப்பில் இருக்கும் உலகளாவிய மனிதகுலத்திற்கு சரியான நேரத்தில் பயனுள்ளதாக இருப்பதற்கும் இதுவே ஒரே வழி. இதை எப்படி அரசின் மூலம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது, தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com