

சுற்றுலா வழிகாட்டி என்பது தொழிலையும் தாண்டி சுவாரஸ்யம் நிறைந்த பணியாகும். மிகச்சிறந்த பெருமைக்குரிய இடங்கள், நாடுகள் குறித்த உண்மையான, சிறந்த மதிப்பீட்டை சுற்றுலாப் பயணிகளிடம் உருவாக்கும் மாபெரும் பணியை செய்பவர்கள்தான் சுற்றுலா வழிகாட்டிகள்.
சுற்றுலாப் பயணிகளுடன் நட்புடன் பழகி அவர்கள் திருப்தி அடையும் வகையில் எளிமையாகவும் சிறப்பாகவும் சிரித்த முகத்துடனும் தகவல் சொல்ல வேண்டிய முக்கியமான பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இத்தகைய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
சுற்றுலா தொடர்பான பல்வேறு படிப்புகளை உலகமெங்கும் இருக்கும் கல்வி நிறுவனங்கள் கற்பித்து வருகின்றன.
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், உரிய தகுதிகள் உள்ள வழிகாட்டிகளுக்கு, மண்டல அடிப்படையில் உரிமம் வழங்குகிறது. இந்திய அளவில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான உரிமம் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது.
இதற்கான விவரங்களை அந்தந்த மாநில சுற்றுலாத்துறைகளின் இணையதளத்தில் பார்த்துக் கொள்ள முடியும்.
மண்டல(பிராந்திய) நிலையிலான வழிகாட்டிகளில் (ரீஜினல் லெவல் கெய்ட்ஸ்) 4 பிரிவினர் உள்ளனர்
பொது வகையினர்
முழுநேர அடிப்படையில், தங்களுக்கான மண்டலங்களில் இவர்கள் பணிபுரியலாம். இவர்கள், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்களாக, பட்டம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், தங்களின் பள்ளிப் படிப்பிலும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
பொது - மொழி அடிப்படையிலான வகையினர்
பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், கொரியன், ரஷ்யன், ஜப்பானீஸ், தாய், அராபிக், ஹங்கேரியன், போலிஷ், ஹீப்ரூ மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் புலமை பெற்றவர்கள் இந்த வகை சுற்றுலா வழிகாட்டிகளுக்கான தகுதியைப் பெற்றிருப்பார்கள்.
இவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மற்றும் ஆங்கிலம் தவிர்த்து வேறு நாடுகளின் மொழிகள் ஒன்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
நிபுணத்துவ வழிகாட்டிகள்
சுற்றுலா, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாசாரம், வனம் - வனவிலங்குகள் போன்ற சுற்றுலா தொடர்பான துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், இந்த வகையில் தேர்வு செய்யப்படுவார்கள். நிபுணத்துவ வழிகாட்டி என்ற பெயரில் அழைக்கப்படும்
இவர்கள், ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
நிபுணத்துவம் - மொழி அடிப்படையிலான வகையினர்
சுற்றுலா தொடர்பான, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாசாரம், தொல்லியல் துறை, வனம் - வனவிலங்கு மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பான படிப்புகளில் முனைவர் பட்டம் அல்லது சிறப்பு படிப்பை முடித்தவர்கள் இப்பிரிவில் அடங்குவார்கள்.
வெளிநாட்டு மொழியில் படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் போன்ற அம்சங்களோடு, அந்த மொழி மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
வழிகாட்டிகளுக்கான தேர்வு சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம் (ஐஐடிடி எம்) அல்லது சுற்றுலா அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு ஏதேனும் அமைப்பைக் கொண்டு நடத்தப்படும்.
3 மணிநேரம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலமாக, பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் ஒருவரின் பொது நுண்ணறிவுத் திறன் மற்றும் தகுதி பரிசோதிக்கப்படும்.
மொத்தம் 300 மதிப்பெண்களில், குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும்.தேர்வு பெற்றவருக்கு ஐஐடிடி எம் -இல் பயிற்சியளிக்கப்படும்.
நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கான இடங்கள் ஒதுக்கப்படும்.
குவாலியர், புவனேஸ்வர், டெல்லி, கோவா, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐஐடிடி எம்- இன் வளாகங்களில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
ஆர்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் இடங்களில் களப்பயிற்சி மற்றும் வகுப்பறை பயிற்சிகள் நடைபெறும்.
பொது மற்றும் பொது - மொழி அடிப்படையிலான பிரிவினருக்கு 26 வாரங்களும், நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவம் - மொழி அடிப்படையிலான பிரிவினருக்கு 13 வாரங்களும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்த பின் எழுத்துத் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட தேர்வு நடைபெறும். ஒருவரின் வழிகாட்டும் திறன், பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் இடங்களைப் பற்றிய அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வெளிநாட்டு மொழி திறன் தொடர்பான கேள்விகள் இதில் இடம்பெறும்.
இத் தேர்வை எழுத, வகுப்பறை மற்றும் களப்பயிற்சியில், குறைந்தது 80% வருகைப் பதிவைப் பெற்றிருக்க வேண்டும். இதன் பின் இந்திய அரசின், மண்டல சுற்றுலா அலுவலகத்தால், பிராந்திய நிலையிலான வழிகாட்டி உரிமம் வழங்கப்படும்.
இந்த உரிமம் 3 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். பின்னர், இதை புதுப்பித்துக் கொள்ளலாம்.
பொதுவாக முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் இத்தகைய வழிகாட்டிகளைப் பெருமளவில் தங்களின் சேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு நல்ல ஊதியத்தையும் அந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் நகரங்களில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு எப்பொழுதும் கிராக்கி உண்டு. சுற்றுலாத் தொழில் துறையில் நல்ல அறிமுகம் பெற்ற உரிமம் பெற்ற வழிகாட்டி, வருடத்திற்கு ரூ.5லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.
ஆங்கிலம் மட்டுமே அறிந்த வழிகாட்டி, நாள் ஒன்றுக்கு ரூ.2,500 பெற முடியும். பிற வெளிநாட்டு மொழிகளில் புலமை பெற்ற வழிகாட்டி நாள் ஒன்றுக்கு நாளைக்கு ரூ.3,000 வரை பெற முடியும்.
பொறுமையும், பணிவும் சிரித்த முகமும் ஒரு வழிகாட்டியை உயரத்திற்கு கொண்டு செல்லும்.
சுற்றுலா குறித்த விபரங்களுக்கும் சுற்றுலா தொடர்பான பயிற்சிகளுக்கும் http://thims.gov.in/courses.htm என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.