பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்... புதிய எம்.டெக். படிப்பு!

வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். பட்டப் படிப்புகளை டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்துடன் இணைந்து அறிமுகம் செய்திருக்கிறது.
பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்... புதிய எம்.டெக். படிப்பு!
Updated on
1 min read

வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். பட்டப் படிப்புகளை டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்துடன் (அஐஇபஉ) இணைந்து அறிமுகம் செய்திருக்கிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி துறை, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இந்த படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த இணைய விழாவில் இந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்:

ஆறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்த படிப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. போர் வாகன தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம், போர்க்கப்பல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் சென்சார்ஸ், அதிசக்தி பொருட்கள் தொழில்நுட்பம், லேசர் மற்றும் மைக்ரோவேவ் சார்ந்த இயக்கப் பெற்ற ஆற்றல் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் பொறியியல் பட்ட மேற்படிப்புகள் வழங்கப்பட இருக்கின்றன.

ஐ.ஐ.டி.,என்.ஐ.டி. உள்ளிட்ட அரசு பொறியியல் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்த படிப்புகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அனுமதியுடன் வழங்கும். இந்த படிப்புகள் நேரடியாக அல்லது இணையவழியில் பயிற்றுவிக்கப்படும்.

விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்:

இந்திய பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் நிறுவனம் (இன்ஸ்டிடியூட் ஆஃப் டிபென்ஸ் சயின்டிஸ்ட்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ்ட்ஸ்) இந்தப் படிப்புகளைப் போதிக்க கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்யும்.

ஓய்வுபெற்ற டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த பொறியாளர்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் அனுபவமிக்க இவர்கள், பாடங்களைப் போதிக்க தேவையானவழிகாட்டுதல்களைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்குவார்கள்.

இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இன்னொரு சிறப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள டி.ஆர்.டி.ஓ. ஆய்வகங்களிலும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும்வாய்ப்புகள் வழங்கப்படும்.

புதிய வாய்ப்புகள்:

இது குறித்து ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறியதாவது:

""மகாராஷ்டிர மாநிலத்தின் புணேவில் அமைந்துள்ள பாதுகாப்பு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த பட்ட மேற்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றபடி பாதுகாப்பு துறை சார்ந்த நேரடி பொறியியல் தொழில்நுட்ப படிப்புகள் இந்தியாவில் இல்லை.

இந்த புதிய திட்டத்தின்படி பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் படிக்க மாணவ, மாணவிகளுக்கு பரவலாக வாய்ப்புகள் ஏற்படும். பாதுகாப்புத்துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உற்பத்தி தொழிற்சாலைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகளை பெற இளம் தலைமுறையினரை இந்த படிப்புகள் தயார்படுத்தும். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்ற மனிதவளத்தை இந்தியாவில் உருவாக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com