காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேளுங்கள்... கவனமாக!

இன்றைய உலகம் தகவல் தொடர்பு துறை உலகமாக மாறிவிட்டது. தகவல் பரிமாற்றத்திற்கு எத்தனையோ வழிகள் உருவாகிவிட்டன. அந்த வழிகளில் சிறப்பானவற்றைத் தேர்வு செய்து நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

News image
Updated On :9 நவம்பர் 2021, 12:30 am

வி.குமாரமுருகன்


இன்றைய உலகம் தகவல் தொடர்பு துறை உலகமாக மாறிவிட்டது. தகவல் பரிமாற்றத்திற்கு எத்தனையோ வழிகள் உருவாகிவிட்டன. அந்த வழிகளில் சிறப்பானவற்றைத் தேர்வு செய்து நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

இப்படி தகவல் தொடர்பில் புதுமைகளை விரும்பும் நாமும், மற்றவருடன் நமது கருத்துகளை பரிமாறிக்கொள்ள தேவையான தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிவிட்டது. ஒருவரின் வெற்றிக்கான பல காரணங்களில் தகவல் தொடர்பு திறனும் ஒரு காரணமாக மாறிவருகிறது.

பணி இடத்திலும், பணியிடத்திற்கு வெளியிலும் ஒருவருடைய தகவல் தொடர்புத்திறன் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம் சிந்தனையில் தோன்றும் கருத்துகளை தெளிவாக தெரிவிக்கும் திறனுடையவர்கள் எத்துறையிலும் ஜொலிக்க முடியும் .

தகவல் தொடர்புத்திறனை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்கள் தங்களுடைய கருத்துகளை மட்டுமே பிறரிடம் பகிர்ந்து கொள்வதுடன்நின்றுவிடக் கூடாது. அது உண்மையில் தகவல் தொடர்பே இல்லை.தகவல் தொடர்பு என்பது தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகும். ஒருவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது தகவல் தொடர்பு ஆகாது.

அப்படி என்றால் மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்க வேண்டும். இதைத்தான் "ஆக்டிவ் லிசனிங் ஸ்கில்' என்று சொல்கிறார்கள். ஒருவர் நம்மிடம் பேசும்போது முழுமையாக அவரின் கருத்துகளை, தகவல்களை உள்வாங்க வேண்டும். அவர் பேசும் கருத்துகளை நாம் தெளிவாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை அவரிடம் ஏற்படுத்த வேண்டும்.பிறர் பேசுவதைக் கவனமுடன் கேட்டால்தான், அவர்கள் கூடுதலாக நமக்கு பல தகவல்களைத் தருவார்கள்.

அப்படி இல்லாமல் பிறர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு என்ன பதில் சொல்வது என்ற சிந்தனை ஓட்டத்திற்குள் நாம் சென்றுவிட்டால் அவர் கூறும் விசயங்களை உள்வாங்க முடியாது.அவர் என்ன சொன்னார் என்பது கூட மறந்து விடும்.

"நமக்குத்தான் எல்லாம் தெரியுமே...பிறர் சொல்வதை நான் ஏன் கவனிக்க வேண்டும் ?'

என்று நீங்கள் இருந்துவிட்டால் பல விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வராமல் போய்விடக்கூடும். மிக உயர்ந்த பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்கள்,தன் அருகில் உள்ளவர்கள், சக ஊழியர்கள், தனக்குக் கீழ் பணியாற்றியவர்கள் கூறுவதைஎல்லாம் கவனமாகக் கேட்டதால் தான் இந்த உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளனர் என்பதை நாம் சிறிது உன்னிப்பாகக் கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.அப்படி என்றால் பணியிடத்தில் பதவி உயர்வு பெற நினைத்தாலோ, அல்லது இன்றைய நிலையை விட உயர் நிலையை அடைய வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது புதிதாக ஒரு வேலையைத்தேடுகிறீர்கள் என்றாலோ உங்களின் கவனிக்கும் திறனை (அதாவதுமற்றவர்கள் கூறுவதை) அதிகரிப்பது அவசியம்.

ஒருவர் உங்களிடம் பேசும் போதுநீங்கள் அதை உண்மையாக கவனித்துக் கொண்டு அவருக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தால் அவர் உங்களுடனான தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார். இப்படி நீங்கள் மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால் , அவர்கள் உங்களுடன் ஒத்துழைத்து நீங்கள் விரும்பும் வேலையை விரைவாகவும் , சிறப்பாகவும் செய்து முடிக்க உதவுவார்கள். இதனால் பணியிடத்தில் புதிய புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

அதையும் தாண்டி ஒருவர் பேசும்போது குறுக்கே, குறுக்கே அவரிடம் இடைமறித்துப் பேசாமல் இருந்தாலேயே அவருக்கு நம்மைப் பிடித்து விடும். அப்படி பிடித்து விட்டால் அவர்நம் மீதுகொண்டுள்ள நம்பிக்கை அதிகமாகும்.

பணிச்சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் நம்மிடம் பேசும் எதிராளியும் நம்மைப் போலவே இருக்க முற்படுவார். இதன் காரணமாக பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு சொல்லும்போது அவர் அதை முழுமையாக உள்வாங்கி செயல்படுவார் என்பதால் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வினைக் காண முடியும்.

அதுமட்டுமல்ல, ஒருவர் உண்மையாகவே மற்றவரின் கருத்துகளை கவனித்து கேட்கிறார் என்றால் , மற்றவர்கள் அவரிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் புதிய, புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டு அறிவை பெருக்கிக் கொள்ள முடியும்.

மேலும் முக்கியமான தகவலை தவற விடாமல் இருப்பதற்கும் கவனிக்கும் திறன் அவசியமாகிறது. ஒரு குறிப்பிட்ட தகவல் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய வேண்டும் என்ற சூழ்நிலையில் அதை நாம் மறந்து விட்டால் கூட நம்முடன் பணியாற்றுபவர்கள் நம்மிடம் நேரடியாக வந்து அந்த விவரங்களைச் சொல்லி விடுவார்கள்.

எனவே பிறர் சொல்வதை "கவனமாகக் கேட்பதுவும்'ஒரு திறன்தான் என்பதை புரிந்து கொண்டு நாம் செயல்பட்டால் பணி இடத்திலும், வெளியிடத்திலும் நமது மரியாதையை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதுடன் உயர் நிலையை விரைவாக எட்ட முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.