முன்மாதிரியாகியிருக்கும் மலையாள நடிகைகள்...!
கேரளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கைதாகிய நடிகர் திலீப், மலையாள நடிகர் நடிகைகளின் சங்கமான "அம்மா' அமைப்பின் எல்லா


கேரளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கைதாகிய நடிகர் திலீப், மலையாள நடிகர் நடிகைகளின் சங்கமான "அம்மா' அமைப்பின் எல்லா பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். திலீப் ஜாமினில் வெளி வந்த சில மாதங்களில் நடிகர் மோகன்லால் தலைவராக இருக்கும் "அம்மா' அமைப்பில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடிவாகியுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் "அம்மா' அமைப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து ரேவதி, பத்மபிரியா, பார்வதி நடிகர் திலீப் மீண்டும் "அம்மா' அமைப்பில் சேர்வது குறித்து அம்மாவின் செயற்குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நடிகை பாலியல் வன்முறைக்கு ஆளானதைத் தொடர்ந்து நடிகைகளின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட அமைப்பில், பல நடிகைகளும் உறுப்பினர்கள். அவர்கள் "அம்மா' அமைப்பிலும் உறுப்பினர்கள்.
பார்வதி, ரீமா கல்லிங்கல் , ரேவதி, ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், பத்மப்ரியா. இவர்கள் கூட்டாக குரல் உயர்த்த மலையாள படவுலகில் பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது. நடிகைகளிடமிருந்து இத்தகைய எதிர்ப்பை கேரளமும், மலையாள படவுலகமும், "அம்மா' அமைப்பும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த எதிர்ப்பை புரிந்து கொண்ட நடிகர் திலீப் நிலுவையில் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை அம்மா அமைப்பில் சேரப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். மோகன்லாலும் அம்மாவின் தலைவர் என்ற முறையில் தர்ம சங்கடத்தில்.
பாதிக்கப்பட்ட சக நடிகைக்காக உரத்த குரல் குரல் கொடுத்தவர்களின் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் முன்னணியில் இருந்தாலும், இப்போதைய விவகாரத்தில் மஞ்சு தனது கருத்தை இன்னமும் பதிவு செய்யவில்லை.
சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட பல வித பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தவர் நடிகை பார்வதி. அவரைப் பற்றி கேரளத்தில் பரபரப்பாகப் பேசினாலும், கொஞ்ச நாளில் அது தணிந்து போனது.
ஹாலிவுட்டில் நடிகர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவரின் அத்து மீறல்களுக்கு பலியான நடிகைகள் "நானும் தான்'.. (ம்ங்ங் ற்ர்ர்) என்று அடுத்தடுத்து "வாய் திறக்க, அதிர்ச்சி அலைகள் ஹாலிவுட்டை ஆக்கிரமித்தன.
பாலிவுட் நடிகைகள் அங்கு நடக்கும் விவகாரம் குறித்து மெüனம் சாதித்தார்கள். பாலிவுட்டில் கொஞ்சம் வெளிப்டையாகப் பேசிய ஸ்வர பாஸ்கரை குறி வைத்து விமர்சனங்கள் எழுந்து மெüனமாக்கியது. மலையாளத்தில் பார்வதி, மம்மூட்டி போலீஸ் அதிகாரியாக நடித்த "கசபா' படம் குறித்து விமர்சிக்க ... பார்வதியை சமூக தளங்களில் வரம்பு மீறி விமர்சன ஊர்வலங்கள் நடந்தன. பார்வதி பாலின வல்லுறவுக்கு இரையாக வேண்டிவரும் என்று பயமுறுத்தல்கள் வர.. பார்வதி போலீசின் துணையை நாடினார். சென்ற மே மாதம் ஒரு விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை மம்மூட்டியிடமிருந்து பெற்றுக் கொண்ட பார்வதி விருது பெற்றுக் கொள்வதற்கு முன்பு குனிந்து மம்மூட்டியின் பாதத்தை தொட்டு வணங்கினார். அது பார்வதியிடம் வெளியான சமரச வெள்ளைக் கோடி என்று கேரளத்தில் பேசப்பட்டது.
பொதுவாக எல்லா படவுலகில் இருப்பது போல், மலையாள படஉலகிலும் நடிகர்களின் ஆதிக்கம் வலுவாகவே இருக்கிறது. நடிகர்களை விமர்சித்தால் பட வாய்ப்புகள் குறையும் என்பதும் நிதர்சனம். இந்த உண்மை, அம்மா அமைப்பிற்கு திலீப்பின் இரண்டாவது வரவை எதிர்க்கும் ஆறு நடிகைகளுக்கும் தெரியும்.
இருந்த போதிலும், பின்விளைவுகளை குறித்து கவலைப்படாமல், பாலியல் வன்முறைக்கு இரையான சக நடிகைக்கு ஆதரவு தரும் விதமாகவும், தார்மீக கொள்கைக்காகவும், நியாயத்திற்காகவும் குரல் கொடுத்திருக்கும் இந்த ஆறு நடிகைகள் இந்திய நடிகைகளுக்கு மட்டுமல்ல பெண் சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியாகியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...