தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை!
தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியை, தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை படைத்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.


தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியை, தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை படைத்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி(23). பரத நாட்டிய ஆசிரியையான இவர் தற்காப்புக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் அதைக்கற்றுத் தேர்ந்து அதிலேயே கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தனது சாதனை குறித்து ஸ்ருதி தெரிவித்தது:
""மதுரையில் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனது மூன்றாம் வகுப்பு முதல் பரதநாட்டியத்தை முறையாக பல ஆண்டுகள் கற்றுத் தேர்ச்சி பெற்றேன். குச்சுப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட நடன வகைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். நடனத்தில் தேர்ச்சிப் பெற்றாலும் அதை வெளிக் கொண்டு வருவதில் எனது குடும்பத்தினருக்கு ஆர்வம் இல்லை. பட்டப் படிப்பு முடித்தவுடன் எனது வீட்டில் திருமணத்துக்கு வரன் பார்த்தனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த தற்காப்புக்கலை நிபுணர் நாராயணனுடன் 2016-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சிறுமிகளுக்கு பரதநாட்டிய பயிற்சி அளித்து வந்தேன். முதலில் தற்காப்புக் கலையில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் எனது கணவர் பல இடங்களுக்கு தற்காப்புக் கலையை பயிற்றுவிக்க செல்லும்போது நானும் உடன்செல்வேன். இதனால் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. மேலும் எனது கணவரும் என்னை ஊக்குவித்து தற்காப்புக் கலையில் பயிற்சி அளித்தார்.
இதற்கிடையில் எனது கணவர் தற்காப்பு கலையில் 13 கின்னஸ் சாதனைகளை படைத்ததால் அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தன. இதைப் போன்று நாமும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அதற்குள் கர்ப்பம் அடைந்ததால் சாதனை முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது. இதனால் உடலும் மிகவும் பலவீனமடைந்தது. இதனால் எனது குடும்பத்தினர் அனைவரும் தற்காப்புக்கலை பயிற்சியை நிறுத்துமாறு கூறி விட்டனர். ஆனால் எனது கணவர் நாராயணன் என்னை தொடர்ந்து ஊக்குவித்து பயிற்சி அளித்து வந்தார்.
இதில் கொரிய தற்காப்புக்கலையான டேக்வாண்டோவில் எல்போ ஸ்ட்ரைக் எனப்படும் இரு முழங்கைகளையும் தொடர்ந்து பயன்படுத்தி தாக்கும் முறையில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இதையடுத்து தினசரி ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் பயிற்சி எடுத்து வந்தேன். பயிற்சியின்போது இரு முழங்கைகளையும் தொடர்ந்து பயன்படுத்துவதால் கைகளை தூக்க முடியாமல் ஆகிவிடும். பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பயிற்சியைத் தொடருவேன்.
ஒருபுறம் பச்சிளம் குழந்தையையும் பார்த்துக் கொண்டு மறுபுறம் பயிற்சியையும் தொடருவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் கணவர் அளித்த ஆதரவால் தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு பின்னர் ஏப்ரல் 26-இல் ஒரு நிமிடத்தில் 211 முறை எல்போ ஸ்ட்ரைக் செய்து முடித்தேன். இதற்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் எல்போ ஸ்ட்ரைக்கில் ஒரு நிமிடத்தில் 140 முறை செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. நான் பாகிஸ்தான் பெண்ணின் சாதனையை முறியடித்து ஒரு நிமிடத்தில் 211 முறை எல்போ ஸ்ட்ரைக் செய்ததால் எனது சாதனையை கின்னஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டு சாதனைக்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது.
இதையடுத்து அனைத்து தரப்பிலும் இருந்து எனக்கு பாராட்டுகள் குவிகின்றன,
இதன் காரணமாக பலரும் என்னை தொடர்பு கொண்டு தற்காப்புக் கலை பயிற்சி குறித்து கேட்டு வருகின்றனர்.
நீலப்பட்டை பெற்றுள்ள நான் கருப்புப்பட்டை பெற்று பெண்களுக்கு தற்காப்புக் கலையை பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் எனது கணவரும் எல்போ ஸ்ட்ரைக்கில் கின்னஸ் சாதனை படைத்துள்ளதால், சாதனை தம்பதிகள் என கின்னஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் வேறு எவரும் புரியாத சாதனை. தற்போது 3 நிமிடங்களில் 520 எல்போ ஸ்ட்ரைக் செய்து கின்னஸ் அமைப்புக்கு அனுப்பியுள்ளேன். தற்காப்புக் கலையில் வேறு சில கின்னஸ் சாதனைக்கும் திட்டமிட்டுள்ளேன்'' என்றார் ஸ்ருதி.
படங்கள்-ப. விஜயகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...