

ஆரம்பத்தேர்வு, பிரதானத்தேர்வு, நேர்காணல் என மூன்று நிலை தேர்வு. 20 லட்சம் பேரில் 10 ஆயிரம் பேர் மட்டும் பிரதானத்தேர்வுக்கும், நேர்காணலின் இறுதியில் ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள். இது தான் ஐஏஎஸ் தேர்வின் முக்கியத்துவம். கடின உழைப்பு, விடாமுயற்சி, தீராத இலட்சியவேட்கை, தளராத ஊக்கம், தங்குத்தடையில்லாத படிப்பு ஆகியவற்றின் உச்சம் தான் ஐஏஎஸ். அப்படிப்பட்ட எண்ணத்துடன் ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 36-ஆவது இடமும், புதுச்சேரியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நகரை சேர்ந்த ஆர்.சரண்யா.
8 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் நகரில் இருந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிவாகைச்சூடியிருக்கும் சரண்யாவின் கனவு நனவானது எப்படி?
சின்னவயதில் ஐஏஎஸ் ஆகும் கனவு எனக்கு இருந்ததில்லை. மருத்துவர், விஞ்ஞானி, பொறியாளர் போன்றவர்களைப் பார்த்தால் அவர்களைப் போல ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அவ்வப்போது அது மாறிக்கொண்டே இருக்கும். இளம் வயதிலேயே ஏழ்மையில் தவித்ததால், யாருக்காவது உதவும் வேலையைச் செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டுமே ஆரம்பத்தில் இருந்தே மனதில் ஊறிப்போயிருந்தது.
கல்லூரி படிக்கும்போது ஐஏஎஸ் கனவாக உருவெடுத்தது. அப்பா ராமச்சந்திரன் தான், ஐஏஎஸ் ஆகும் திறமை, ஆற்றல் என்னில் ஒளிந்திருப்பதாக அடிக்கடி கூறி என்னை ஊக்கப்படுத்தி, அந்த கனவை ஆழமாக மனதில் ஊன்ற உந்துதலாக இருந்தார். பணநெருக்கடி இருந்தபோதும் என் அக்கா அபிநயாவை எம்.டி., தம்பி மால் மருகனை எம்.பி.பி.எஸ். வரையும் படிக்க வைத்திருக்கிறார். எங்கள் மூவரின் முன்னேற்றத்தில் அப்பா, அம்மாவின் பங்கு சொல்லால் சொல்லி முடிக்க முடியாது.
இளங்கலை பட்டம்பெற்ற பிறகு சென்னை சென்று ஐஏஎஸ் அகாதெமியில் சேர்ந்தபிறகுதான் மூன்றுநிலை தேர்வு இருப்பது தெரிந்தது. முதல் முறை ஆரம்ப, பிரதானத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றேன். நேர்காணலில் வெல்லமுடியவில்லை. இரண்டாவதுமுறையும் இதே தான் நடந்தது. முயற்சி திருவினையாக்கும், விடாமுயற்சி வெற்றியைத் தரும் என மனதில் பதித்துக்கொண்டு, மூன்றாவது முறை தேர்வுக்கு தயாரானேன்.
ஒன்றரை ஆண்டுகாலம் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன். எப்படி, என்ன, எவ்வளவுநேரம் படிப்பது என்று திட்டமிட்டுக் கொண்டேன்.
இணையவழித்தேர்வுகளை எழுதி, என் அறிவுத்திறனை மதிப்பிட்டு, மேம்படுத்திக்கொண்டேன். தேர்வின் முடிவு பற்றிக்கவலைப்படாமல் என்னை தயார்ப்படுத்திக்கொள்வதில் மட்டுமே அக்கறையாக இருந்தேன். தேர்வுக்கு முன்பே நம்பிக்கையோடு இருந்தேன். அதன்படியே தேர்வில் வெற்றியும் கண்டுள்ளேன்.
என் அம்மா அடிக்கடி கூறிவந்தது போல, ஐஏஎஸ் அதிகாரியாக பிறருக்கு உதவப்போகிறேன். கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே என் பணிக்கான இலக்காக கொண்டுள்ளேன்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.