குறைந்த வயதிலேயே பத்மபூஷண் விருது பெற்றவர்!
By DIN | Published On : 05th February 2020 03:20 PM | Last Updated : 05th February 2020 03:20 PM | அ+அ அ- |

ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் போது, கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், 2020- ஆம் ஆண்டிற்கான பத்மபூஷண் விருது 16 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் ஒருவர்.
இதுவரை பத்மபூஷண் விருதுபெற்ற இந்திய விளையாட்டு வீரர்களிலேயே மிக குறைந்த வயதில் 24-ஆவது வயதில் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார் சிந்து.
ஏற்கெனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் "பத்ம ஸ்ரீ' விருது பெற்றுள்ள பி.வி.சிந்து , தொடர்ந்து உலக தர வரிசையில் ஆறாவது இடத்தை பிடித்ததோடு, 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றார்.
"71 -ஆவது இந்திய குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட விருதுகளின்போது, எனக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுவதாக வந்த தகவலை என் பெற்றோரும், நண்பர்களும் என்னிடம் கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை அடுத்தடுத்து வாழ்த்து தெரிவித்து போன் கால்கள் வரத் தொடங்கிய பின்னரே நம்பினேன். குறைந்த வயதில் பத்மபூஷண் விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. இது நானே எதிர்பார்க்காத நிகழ்வாகும். இந்த அங்கீகாரத்தைக் கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி. இந்த சமயத்தில் இந்த விருது எனக்கு கிடைக்க பேட்மின்டன் அசோசியேஷன் ஆப் இந்தியா, ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர்களும் காரணமாவார்கள். அவர்கள் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. இந்த விருது இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டுமென்ற உந்துதலை கொடுத்துள்ளது'' என்கிறார் பி.வி.சிந்து.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...