நீலகிரி மாவட்டத்தில் பாலாடா எனும் கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பழங்குடியின பெண்களால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையமாகும்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய பழங்குடியின நல அமைச்சகம் மற்றும் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க் இதுவாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பழங்குடியினர் பிரிவினரை உள்ளடக்கி இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பழங்குடியினத்தில் இருந்தும் இரண்டு பெண்கள் என 12 பெண்கள் ஷிப்ட் முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.8500 முதல் 10000 வரை சம்பளத்துடன் 3 சதவீத அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது. மேலும், இங்கு பணியாற்றும் அனைவருமே பெண்கள் என்பதால், அனைவருமே தங்களின் பொறுப்பை உணர்ந்து கடமையாற்றுகின்றனர்.