கராத்தே போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து சாதனைகளைப் படைத்து வருகிறார் பள்ளி மாணவி தக்ஷயாஸ்ரீ.
ஈரோடு திண்டல் வேளாளர் மெட்ரிக். பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர், தனது வெற்றிக்குக் காரணம் குறித்து கூறுகையில், ""எனது தந்தை கராத்தே பயிற்சியாளர். அவர்தான் வெற்றிக்குப் பின்னால் இருக்கிறார்.
2018-ஆம் ஆண்டில் புதுதில்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழகத்தின் சார்பில் தங்கம் வென்றேன். பின்னர், தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் நடைபெற்றகாமன்வெல்த் போட்டிகள், இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிட்டோரியா கராத்தே போட்டிகளிலும் பங்கேற்று, பரிசுகளைப் பெற்றேன்.
2019, 2020, 2023-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றேன். கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றேன்'' என்றார்.