உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள யோகா, இயற்கை மருத்துவத்தில் கூறும் மந்திரமே "பஞ்ச தந்திரம்' ஆகும்.
ஒருவர் இதை பின்பற்றுவதால் உடலை திடகாத்திரமாகவும், தேங்கியக் கழிவுகளை வெளியேற்றி புத்துணர்வோடு இருக்கலாம். மேலும், மனதளவிலும் தூய்மையாகவும் வாழ இயலும்.
தினமும் இருமுறை உணவு , மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தல், இரு முறை பிரார்த்தனை, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, வாரம் ஒருமுறை விரதம் ஆகிய ஐந்தும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். தினமும் ஒரு வேளை உண்பவர் யோகியாகவும், இரு வேளை உண்பவர் போகியாகவும், மூன்று வேளை உண்பவர் ரோகியாகவும் காணப்படுவார்.
இவ்வாறு தினம் இரு முறை உணவு உள்கொள்ளும் பழக்கத்தைக் கடைபிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
உணவை உண்பது எவ்வாறு என்பதை அறியலாம்:
ஆரோக்கியமாக வாழ்வுக்கு சாத்விக ஆகார முறையைக் கடை
பிடிக்க வேண்டும். இதில், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் அடங்கும். இந்த உணவுகள் இயற்கையாகவும், புதிதாகத் தயாரான உணவாகவும் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை
உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.
தாமசிக, ராஜசிக ஆகாரத்தைத் தவிர்க்க வேண்டும். பலகாரங்கள், நாள்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அனைத்தும் தாமசிக உணவுகளாகும். இந்த வகை உணவுகளை உட்கொள்ளுவதால், உடல் பருமன், நோய்கள், உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்படும்.
அதிக அளவு உப்பு, காரம் சேர்த்த உணவு வகைகள் ராஜசிக
உணவுகளாகும். இவற்றை உட்கொள்வதால், ரத்த அழுத்தம், நரம்பு சார்ந்த உபாதைகள், மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
உணவு உட்கொண்டு செரிமானமாகப் போதிய நேர இடைவெளியை அளிக்க வேண்டும். பின்னர்தான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். அதாவது மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
உணவு உட்கொள்ளும் இடம் தூய்மையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். உண்ணும் உணவை நன்கு மென்று சுவைத்து மனதில் ஒருநிலையோடு உட்கொள்ள வேண்டும். ஒருவர் தன் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்து நிறைந்த அளவான உணவை உட்கொள்வது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.