

ஊராட்சி ஒன்றியத் தலைவருக்குப் பல அதிகாரங்களும் கடமைகளும் உள்ளன. அவர்தான் ஊராட்சி ஒன்றியக் கூட்டங்களைத் தலைமை தாங்கி நடத்துவார்.
ஊராட்சி ஒன்றியத்தின் எல்லாப் பதிவு ஏடுகளையும் பார்க்கும் அதிகாரமும், எல்லாக் கோப்புகளையும் பார்க்கும் உரிமையும் தலைவருக்கு உண்டு. கீழ்க் கண்டவை அவரது மற்ற அதிகாரங்களாகும்:
புதிதாகப் பதவியேற்கும் உறுப்பினர்களுக்கு உறுதிமொழி எடுக்கச் செய்வது.
ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராம ஊராட்சிகள் இருக்கின்றன அல்லவா? அந்தக் கிராம ஊராட்சிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது. பொருளாதார முன்னேற்றம் குறித்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து சமூகத் திட்டங்களைச் செயற்படுத்துவது.
ஆண்டு வரவு செலவுத் திட்டம் தயார் செய்து சபையின் ஒப்புதல் பெறுதல். ஒன்றிய அளவில் வரிகளை நிர்ணயம் செய்தல். அத்தகைய வரிகளை வசூல் செய்தல்.
அரசு சலுகைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தல்.
மேலும், ஊராட்சி ஒன்றிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில விஷயங்களில் உரிமம் License ) வழங்குதல். சாலைகள் அமைத்தல், தண்ணீர்த் தொட்டிகள் கட்டுதல், தொடக்கப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றிற்கான கட்டடங்கள் கட்டுதல், இத்தகைய பணிகளைச் செய்து முடிப்பதற்கு டெண்டர்விடுதல், அந்தப் பணிகளை ஒப்பந்தக்காரர்களிடம் முறைப்படி ஒப்படைத்தல் ஆகியவையும் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் முக்கியக் கடமைகள் மற்றும் அதிகாரங்களில் அடங்கும்.
ஊராட்சி ஒன்றியத்தின் வாயிலாக சில வளர்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அவை யாவை எனப் பார்ப்போம்.
1. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் ( ntergrated rural development programme (IRDP )
கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதனால் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தொழில் முனைவோர்களாக ஆயினர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஐம்பது சதவிகிதம் நிதி தருகிறது. மாநில அரசு ஐம்பது சதவிகிதம் நிதி தருகிறது.
2. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (National Rural Employment Programme(NREP)
இந்தத் திட்டத்திற்கும் மத்திய அரசு ஐம்பது சதவிகிதம் நிதி தருகிறது. மாநில அரசு ஐம்பது சதவிகிதம் நிதி தருகிறது. இதனால் ஊரக சிறு தொழில்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
3. ஊரகத் தொழிலாளர் வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (Rual labour employment Guarantee Programme)(RLEGP )
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளித்து, அவர்களுக்கு உத்தரவாதமான வேலை அளித்தல் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
4. ஜவகர் ரோஜ்கார் யோஜ்னா Jawahar Rozgar Yojana (JRY)
இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு எண்பது சதவிகித நிதி அளிக்கிறது. மாநில அரசு இருபது சதவிகித நிதி தருகிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு வேலை அளிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை தருவது இதன் முக்கிய நோக்கம். இதனால் நாடு முழுவதும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதால் பல குடும்பங்கள் நேரடியாகப் பயனடைந்தன.
இத்துடன் ஊராட்சி ஒன்றியம் குறித்தான விளக்கங்கள் நிறைவடைகின்றன. அடுத்ததாக நாம் மாவட்ட ஊராட்சி நிர்வாகம் செயல்படும் விதம் பற்றிப் பார்ப்போம்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.