நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரங்கம்: காலத்தில் செய்யும் உதவி!

குப்புசாமி: வாப்பா...! ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்...

News image
Updated On :29 ஏப்ரல் 2016, 12:30 pm

பூதலூர் முத்து

காட்சி-1

இடம்-வீடு

மாந்தர்-குப்புசாமி, வடிவு, சுந்தரம், பாண்டியன் (+2 மாணவர்)

(குப்புசாமியின் நண்பர் சுந்தரம் வருகிறார்)

குப்புசாமி: வாப்பா...! ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்...

சுந்தரம்: நண்பரா இருந்தாலும் அடிக்கடி ஒரு வீட்டுக்கு நாம போகலாமா?

குப்புசாமி: நல்ல பாலிசி...என்ன விஷயம்?

சுந்தரம்: என் மகன் ரகு +2 முடிச்சிட்டான்...ஓரளவு மார்க் வாங்கியிருக்கான்...அவனை காலேஜிலே சேர்க்கணும்.

குப்புசாமி: எங்கே பார்த்தாலும் காலேஜ்தான்....ஏதாவது ஒண்ணுலே சேர்த்திடு...

சுந்தரம்: அரசாங்கம் நடத்துறதுலகூட குறைஞ்சது பத்தாயிரம் தேவைப்படுது..., புத்தகம், உடை..., எல்லாம் வேறே...., போன மாசம் எனக்கு உடம்பு சரியில்லே..., கையிலே இருந்த காசெல்லாம் கரைஞ்சு போச்சு!...., ஒரு பத்தாயிரம் கொடு.... ஆறு மாசத்திலே திருப்பிக் கொடுக்கிறேன்.

குப்புசாமி: (தயங்கியவாறு) பார்க்கலாம்...,கொஞ்சம் பொறு...

(மனைவி வடிவு... மற்றும் மகன் பாண்டியன், இந்த பதிலைக் கேட்டு வருந்துகிறார்கள்)

சுந்தரம்: நல்ல விதமா சொல்லுப்பா...! நான் வர்றேன்...(செல்கிறார்)

காட்சி-2

இடம்-வீடு

மாந்தர்-குப்புசாமி, வடிவு, பாண்டியன்.

பாண்டியன்: அப்பா...ரகு ரொம்ப நல்ல பையன்ப்பா...ரெண்டு மாசத்துக்கு முன்னால நான் சைக்கிள்ல இருந்து விழுந்தப்போ, அவன்தான்பா என்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போனான்....

குப்புசாமி: அதுக்கென்ன..., வழக்கமா நாம செய்யறதுதானே?

வடிவு: அவங்க ஏழை...பிள்ளையோட படிப்புன்னு சொல்லி உதவி கேட்கறார்....செய்யலாங்க..., அதுவும் ஒரு புண்ணியம்தான்.

குப்புசாமி: புண்ணியம்தான்...,பணம்?

வடிவு: போனஸ் பணம் வந்திச்சே...

குப்புசாமி: (வேறு வழியின்றி) சரி...,கொடுக்கலாம்...இன்னும் ஒரு வாரம் ஆகட்டும்...நமக்கு வேறே எதாவது முக்கியமான செலவு இருக்கான்னு பார்ப்போம்.

(தாயும், மகனும் அவர் என்ன சொல்வாரோ என்று தவிக்கிறார்கள்)

குப்புசாமி: ....செலவு இல்லேன்னாலும் கொஞ்சம் தாமதம் பண்ணித்தான் கொடுக்கணும்...உடனே கொடுத்தா மதிப்பு இல்லே...நான் வங்கி வரைக்கும் போயிட்டு வரேன். (வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் போடச் செல்கிறார். அதைக் கண்டு அவர்கள் வருந்துகிறார்கள்)

காட்சி-3

இடம்-வீடு

மாந்தர்-குப்புசாமி, வடிவு, பாண்டியன்.

(பத்து நாட்கள் செல்கின்றன. குப்புசாமி அமைதியாக இருக்கிறார். அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அவராக ஏதாவது சொல்வாரா என்று பார்க்கிறார்கள்....வடிவை அழைக்கிறார்.)

குப்புசாமி: உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...

வடிவு: (நம்பிக்கையுடன்) என்ன விஷயங்க....

குப்புசாமி: நண்பன் வேலாண்டியை பூங்காவில் காலையிலே பார்த்தேன்...ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னான்.

வடிவு: என்ன விஷயம்?

குப்புசாமி: நமக்கு உடம்புக்கு ஒண்ணுன்னா நாம யார்கிட்டேயும் நிக்க முடியாது....கையிலே இருக்கிற பணம்தான் உதவி...நாம கடன் வாங்க வேண்டாம்.

வடிவு: நல்ல விஷயம்தான்...ஆறு மாசத்துலே உங்களுக்கோ, எனக்கோ ஒண்ணும் ஆகாது...,நல்லதே நினைப்போம். ருக்மணி ஒரு சேதி சொன்னா....

குப்புசாமி: என்ன சொன்னா...

வடிவு: ஒரு ஏழைக்கு உதவி செஞ்சா அது பழனி...திருப்பதி உண்டியல்ல போடற மாதிரி...கடவுள் அருள் நமக்குக் கை மேலே பலனா கிடைக்குமாம்...

குப்புசாமி: நல்லதுதான்....அடுத்த வருஷம் கோயிலுக்குப் போகும்போது கொஞ்சம் பணம் போடுவோம்...கவலைப்படாதே...

(வடிவு கண் கலங்குகிறாள். பாண்டியனைப் பார்க்கிறாள். அவன் முகத்திலும் வாட்டம்...நண்பருடைய பிள்ளையின் படிப்புக்குப் பணம் கொடுக்க, ஏன் இப்படித் தயங்குகிறார். அதுவும் திரும்ப வரப்போகும் பணம்... என்று நினைக்கிறாள்)

காட்சி-4

இடம்-வீடு

மாந்தர்-குப்புசாமி, வடிவு, சுந்தரம்,

பாண்டியன்.

(ஒரு மாதத்திற்குப்பின் பணம் கேட்டு சுந்தரம் வரவில்லை. குப்புசாமி நிம்மதி அடைகிறார். மாலை நேரம். அழைப்பு மணி ஒலிக்கிறது. சுந்தரம் வருகிறார். பார்த்ததும் குப்புசாமிக்குத் திகைப்பு!)

குப்புசாமி: (செயற்கையாக) வாய்யா...! சுந்தரம்! பார்க்கலாம்னேன்....நீ வரவே இல்லியே...

சுந்தரம்: இங்கே வரவேண்டிய வேலையே இல்லாமப் போச்சு! இப்போ பாண்டியன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க வந்தேன்.

குப்புசாமி: (திகைப்புடன்) பாண்டியனா?

சுந்தரம்: ஆமா....,தம்பி பாண்டியன் ஒரு வாரத்திலேயே பத்தாயிரம் ரூபா கொண்டுவந்து கொடுத்தார்....தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்தமாதிரி இருந்தது அந்த உதவி...

பாண்டியன்: (சுந்தரம், குப்புசாமியைத் தவறாக எண்ணாதவாறு...) அப்பா! உங்களுக்குப் பண நெருக்கடி...,இல்லேன்னா நேரத்திலே குடுத்திருப்பீங்க....ரகு காலேஜிலே சேர்ற நாளும் நெருங்கிடுச்சு...அதனால நானும் என் நண்பர்களும் அஞ்சலகத்திலே சேமிச்ச பணத்திலே இருந்து ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்து பத்தாயிரம் அவருக்குக் குடுத்தோம்...

சுந்தரம்: இந்த மாதிரி நல்ல பிள்ளையைப் பெத்த உங்களுக்குக் கடவுள் நன்மையே செய்வார்.

(குப்புசாமியின் மனம் நெகிழ்கிறது. பணம் தந்த ரகசியம் காத்ததற்காக மகனிடம் கோபமும் இல்லை....நண்பர்கள் பங்கும் இருந்ததால் அவன் சொல்லவில்லை....வடிவும் மகிழ்ச்சி அடைகிறாள்.)

காட்சி-5

இடம்-வீடு

மாந்தர்-குப்புசாமி, வடிவு, பாண்டியன்.

குப்புசாமி: பாண்டியா! உன்னோட உயர்ந்த பண்புக்கு முன்னால நான் சின்னவன் ஆயிட்டேன்.

பாண்டியன்: அப்படிச் சொல்லாதீங்க...நீங்க பெரியவர்...,நாம ஒருத்தருக்கு உதவி செய்ய முடிவு செஞ்சு..., போதிய பணமும் இருந்தா...உடனே செஞ்சுடணும்.... தாமதமா செய்யறதாலே என்ன பயன்? அது இறங்கற இடம் வந்த பின்னால பஸ்ஸிலே இடம் கிடைக்கறா மாதிரிதானே?....காலத்தில் செய்யற உதவி ஒருத்தரோட கண்ணீரைத் துடைக்கும்....காலம் தாழ்த்திக் கொடுத்தால் அவருக்குப் பயனில்லே...கொடுக்கற நமக்கும் மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லே...இது எங்க ஆசிரியர் சொன்னது. அதை நண்பர்கள் மனசிலே பதிய வைச்சேன். அவங்களும் மறுக்கலே...உதவியைக் காலத்தோட செஞ்சோம்.

(பெற்றோர் மகனை நினைத்துப் பெருமிதம் அடைகிறார்கள்)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.