அரங்கம்: தூசி!
சார் கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சூறைக் காற்று பெரும் அலைகளை உருவாக்கும். காற்று கரையைக் கடக்கும் போது



காட்சி 1
இடம்: வகுப்பறை
கதை மாந்தர் - ஆசிரியர் ஆனந்த ராஜ் - மாணவர்கள் - ஜீவன், சூர்யா, கணேஷ், மாணவிகள் அனு, தீபிகா மற்றும் பலர்
ஆசிரியர் ஆனந்த ராஜ் : மாணவர்களே புயலைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
ஜீவன் : சார் கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சூறைக் காற்று பெரும் அலைகளை உருவாக்கும். காற்று கரையைக் கடக்கும் போது அது புயலாக மாறி சேதத்தை உண்டாக்கும்.
ஆசிரியர் : மற்றொரு புயல் உள்ளது.. அது புழுதிப் புயல்! அது பொதுவாக தமிழ்நாட்டில் நிகழ்வதில்லை. வறண்ட பாலைவனங்களில் வீசும். லிபியா ஈரான் நாடுகளில் இது மக்களின் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக உள்ளது. சஹாரா பாலைவனத்தின் தூசு கரிபீயன் தீவுகள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சூர்யா : சார்! இந்த புழுதிப் புயல் எப்படி உருவாகிறது?
ஆசிரியர் : மணல் மூன்று விதமாக இருப்பிடத்தை விட்டு நகர்கிறது.. ஒன்று ஊர்ந்து செல்லுதல், இரண்டாவது ஸால்ட்டேஷன் எனப்படும் தாவிச் செல்லுதல், மூன்றாவது காற்றில் மிதந்து செல்லல். இவற்றில் இரண்டாவது தாவிச் செல்லும் முறையில் தான் பாலைவனங்களில் புழுதிப் புயல் பல தென்னை மர உயரத்தில் வந்து தாக்குகிறது.
தீபிகா : சார் இந்த புழுதி தூசுகளினால் எதுவும் நன்மை உண்டா..
ஆசிரியர் : பல நன்மைகள் உள்ளன. மண்ணில் இருக்கும் ஆர்கானிக் பொருட்களுடன் வினை புரிந்து தாவரங்கள் வளர்ச்சிக்கு புழுதி தூசுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. புவியின் பரப்பில் உள்ள தூசு படலம் தான் காற்று, ஈரம், வெப்பத்தைப் பிடித்து வைத்து தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. தூசு இல்லாவிடில் தாவரங்கள் வளரவே முடியாது. தூசு ஈரத்தைப் பிடித்து வைக்காவிடில் பூமி வறண்ட பாலைவனமாகிவிடும். விஷ வாயுக்களை வடிகட்டி சுத்தமான ஆக்ஸிஜனை அனுப்புகிறது. உலோகத் தூசு பூச்சு தான் தொலைக் காட்சிப் பெட்டிகளில் திரையாக உள்ளது.
அனு : தூசியால் வரும் தீமைகள் என்னென்ன..
ஆசிரியர் : உலர்ந்த தூசி உடலுக்கு கேடு விளைவிக்கும். காரீயத் தூசு விஷம். அது உடலைப் பாதிக்கும். தூசுகளால் பலவித தீமைகள் உள்ளன. கல்குவாரிகள் சிமெண்ட் ஆலை தூசு நுரையீரலைப் பாதிக்கும். அதற்கு சிலிகோஸில் வியாதி என்று பெயர். தூசு இருவகைப் படும்.. கண்ணுக்குத் தெரியும் தூசு, தெரியாத நுண்ணிய தூசு. நுண்ணிய தூசுகள் இரத்தக் குழாய்களை அடைகின்றன. சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா கண் எரிச்சல், சளிதொந்தரவு இவற்றை தூசிகள் உருவாக்கும்.
கணேஷ் : சார் தூசி இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
ஆசிரியர் : வீடுகளில் வேக்குவம் கிளீனர் பயன் படுத்தலாம். அடிக்கடி தரையை ஈரத் துடப்பான் மூலம் துடைத்தால் தூசிகள் போய்விடும்...சரி, இனி இன்றைய வீட்டுப் பாட பகுதிக்கு வருகிறேன்.. நாளை இது பற்றி விவாதிக்கலாம்..(கரும்பலகையை ஆசிரியர் துடைக்க வெண்மையான சாக்பீஸ் தூசு பறக்கிறது)
ஆசிரியர் : யார் சாப்பிடுமுன் கை கழுவுகிறார்களோ இல்லையோ ஆசிரியர்கள் கை கழுவியே ஆக வேண்டும்.. சாக்பீஸ் தூசு போக..

காட்சி 2
இடம்: சூரியா வீடு காலம்: ஞாயிறு காலை
மாந்தர் - அப்பா குமார் அம்மா லட்சுமி
மாந்தர்-பிள்ளைகள் சூர்யா, கணேஷ்.
அம்மா : என்னங்க..,உங்க தலையணை உறை எல்லாம் கழற்றித் தாங்க.. பசங்களை மாடியில் தலையணையை காய வைக்கச் சொல்லுங்க..
கணேஷ் : அப்பா! தலையணையை எதுக்கு வெய்யிலில் காய வைக்கிறோம்?
அப்பா : சூரிய ஓளி நல்ல கிருமி நாசினி.. நுண்ணிய தூசுகள் தலையணையில் இருந்து சூரிய வெப்பத்தால் வெளியேறிவிடும். தலையணையும் புஸ் என உப்பி மெத்தென இருக்கும். இலவம் பஞ்சுக்கு மட்டுமே இந்த குணம் உண்டு. ஃபோம் தலையணைக்கு இல்லை.ஆனால் அந்த ரப்பர் பஞ்சு தலையணைகளை சோப் போட்டு கழுவி சுத்தம் செய்து விடலாம்.. வீணாகாது.
சூரியா : அப்பா எதுக்குப்பா தினம் தரையில் கோரைப் பாயில் படுக்கறீங்க..? நம்ம வீட்டில் தான் கட்டில் மெத்தை எல்லாம் இருக்கே.
குமார் : பசங்களா....., கோரைப் பாயில் படுப்பதால் பல நன்மைகள் உண்டு. மெல்லிய கோரைகள் உடலை அழுத்தும் போது உண்டாகும் அக்கு பிரஷரால் இரத்த ஓட்டம் சீராகும்.. பாய் விரித்த தரையில் புரண்டு புரண்டு படுக்கும் போது உடல் முழுவதற்கும் அழுத்தம் சீராகக் கிடைத்து களைப்பு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நாட்பட்ட கழுத்து வலி, நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் கோரைப் பாயில் படுப்பது நல்லது. காந்திஜி தன் சபர்மதி ஆசிரமத்தில் கோரைப் பாயில் தான் படுத்தார். கோடையில் இதமாகவும் குளிர்காலத்தில் குளிர் தாக்காமலும் இருக்கும் ஒரே படுக்கை கோரைப் பாய்தான். பராமரிப்பது மிகவும் சுலபம்.. நீரில் அலசி காய வைத்து விடலாம்.. பல வருடங்கள் உழைக்கும்!
லட்சுமி : நல்ல கோரைப் பாய்கள் எங்கே கிடைக்குமுங்க?
குமார் : சர்வோதய சங்கம், காதி கிராமத்யோக் பவன், காதி வஸ்திராலயங்கள், சில அரசு கைத்தறி ஷோ ரூம்களில் சரியான உயர அகல அளவில் தரமாகக் கிடைக்கின்றன..பாயைப் படுக்குமுன் ஒரு உதறு உதறினால் போதும் தூசி போய் சுத்தமாகிவிடும்

காட்சி 3
இடம்: பள்ளி கணினி அறை
மாந்தர்: கணினி ஆசிரியர் மாதவன்,
பயிலும் மாணவ மாணவிகள்
ப்ரியங்கா, ஃபரிதா, ஆனந்த், அரவிந்த் மற்றும் பலர்
மாதவன் : மாணவர்களே.. வகுப்பு முடிந்ததும் மறக்காமல் கணினி திரை, சி பி யு இவற்றை உறை போட்டு மூடிச் செல்லுங்கள்.
ப்ரியங்கா : எதுக்காக சார் அப்படிச் செய்யணும்..?
மாதவன் : தூசு உள்ளே போனால் அது ராம், வன் தகடு, மற்றும் கடத்திகள் இணையும் இடங்களில் அடைத்துக் கொண்டு கணினிகள் மிக மெதுவாக இயங்கும். கணினி சமிக்ஞைகள் மெதுவாக உணரப்படும்.
அரவிந்த் : சார்! மாதம் ஒருமுறை சுத்தம் செய்யும் பணியாளர் வேக்குவம் கிளீனரால் சுத்தம் செய்வது அதனால் தானா..?
மாதவன் : ஆமாம்..., ஆனால் அவர் தூசை உறிஞ்சும் கருவி மூலம் செய்யாமல் கணினிகளை மட்டும் ஊதி தூசு போக்கும் இணைப்பான் மூலம் காற்றை ஊதி சுத்தம் செய்வார்.. அப்படித் தான் செய்ய வேண்டும்
ப்ரியங்கா : தூசியை உறிஞ்சி எடுப்பது தானே சார் நல்லது
மாதவன் : கணினிகளில் இணைப்புகள், பிடிப்புகள், மின் சர்க்யூட் பலகைகள் மிக மென்மையானவை.. உறிஞ்சும் இணைப்பு மூலம் சுத்தம் செய்தால் அவை துண்டிக்கப்பட்டு கணினி செயலிழந்து விடும் அபாயம் உள்ளது..! ஆனால் எவ்வளவு பலமாக ஊதினாலும் கெட்டுப் போக வாய்ப்பில்லை..இது தற்போதுள்ள பெரும் திரை ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் பொருந்தும்.
ப்ரியங்கா : கணினி அறைக்குள் தின்பண்டம் சாப்பிடக் கூடாது என அறிவிப்பு உள்ளதே எதுக்கு சார்?
மாதவன் : சாப்பிடும் துகள்கள், தட்டச்சுப் பலகையில் விழும். எண்ணெய்க் கறையுடன் மவுûஸக் கையாண்டால் ஆபத்து!
பரிதா : என்ன ஆகும் சார்?
மாதவன் : அந்த எண்ணெய் வாசனைக்கு எலி புகுந்து மவுசைக் கடித்து ஒயரைத் துண்டாக்கி விடும். மெளஸ் மெளûஸக் கடித்துவிடும்.
(மாணவர்கள் கொல் என சிரிக்கிறார்கள்.. ஆசிரியர் உறை மூலம் ஒரு கணினியை மூடுகிறார்)
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...