இதற்குப் பெயர் விளையாட்டா?: ஞானக்கிளி! - 28
""அக்கா இந்தச் செய்தியை முதலில் கூறிவிடுகிறேன்....''


""அக்கா இந்தச் செய்தியை முதலில் கூறிவிடுகிறேன்....''
ஞானம் வந்ததுமே சிவகாமி குரல் எழுப்பினாள்.
""என்ன அப்படி முக்கியமான செய்தி?'' பாபு கேட்டான்.
""முக்கியம்..., அதே நேரத்தில் எச்சரிக்கையும்கூட!...''
""முதலில் அதைச் சொல்.... மற்றவற்றைப் பிறகு பேசலாம்...'' ஞானம் அனுமதி அளித்தது.
""நான் இங்கே மிதிவண்டியில் வரும்போது சாலையில் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.... இருபது வயது இளைஞன் ஒருவன் மொபெட்டில் வந்தான்.... சற்று நேரத்தில் மற்றொரு இளைஞன் வேறொரு மொபெட்டில் வந்தான்.
""டேய் கோபி,.... மெதுவாகப் போ!....'' என்றவன் அவனுடைய ஒரு காலை கோபியின் வண்டியில் வைத்தான். இரண்டும் ஓடத் தொடங்கின. நான் பயந்துபோய் சாலையோரத்துக்குப் போய்விட்டேன்!
பிள்ளைகள் அச்சத்தோடு கேட்டார்கள்.
""அப்போது சர்....புர்...என்று நான்கைந்து பைக்குகள் பறந்தன. பைக் ரேஸாம்!.... ஒரு பைக் திடீரென்று மொபெட்டில் மோதியது!.... கோபியும் அவன் நண்பனும் தடுமாறி அருகில் மிதிவண்டியில் சென்ற ஒரு பெரியவர் மீது மோதிக் கீழே விழுந்தார்கள். பெரியவருக்குக் காலில் காயம். அருகில் நடந்து சென்ற ஒரு சிறுமிக்கும் கையில் காயம்!....ரேஸ் விட்டவர்களை போலீஸ் துரத்தியது.... ஒருவன் படுவேகமாய்ப் போய் சாலையோர மின் கம்பத்தில் மோதிக் கீழே விழுந்தான்....''
""அடப் பாவமே!...'' என்றான் பாபு.
""சனி, ஞாயிறு விடுமுறை என்றால் இதே தொல்லைதான்!.... சில சாலைகளில் பொதுமக்கள் நடமாடவே முடியாது....சில இஞைஞர்கள் பிறரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.... தங்களைப் பற்றியும் சிந்திப்பதில்லை.... சொல்லப்போனால் பைக்கில் அவர்கள் போகவில்லை....பைக் அவர்களை இழுத்துப் போகிறது!.... அவர்களே வேகமாய்ப் போவதாகப் பெருமை வேறு!....ஒருவன் வாகன உதவியின்றி வேகமாகப் போனால் கூட கர்வம் கொள்ள ஏதுமில்லை.... இயற்கை தந்த உணவும், அதன் சக்தியும், அதற்குக் காரணம்! இந்த மாதிரி பைக் ஓட்டுவதால் எத்தனை பேருக்கு இடைஞ்சல்!.... எவ்வளவு விபத்துகள்!...'' பீட்டர் அழாத குறையாகச் சொன்னான்.
ஞானத்துக்குக் கவலையாக இருந்தது.
""படித்தவர்கள் என்பது பிறருக்குத் தொல்லை தராத அவர்களுடைய பண்பான செயல் மூலமாகத்தானே வெளிப்பட வேண்டும்?....இவர்களுடைய செயல்களைப் பார்த்தால் ....இவர்கள் படித்தார்களா,.... என்ன படித்தார்கள்....என்ற சந்தேகம் வருகிறதே...''
""அக்கா, கவலைப்படாதே...., நாங்களும் எங்களைச் சார்ந்தவர்களும் படித்தவர்கள் என்பதை பண்பு மிகுந்த எங்கள் ஒவ்வொரு செயலிலும் காட்டுவோம்...''
""மகிழ்ச்சி!.... உங்களுக்கு ஒரு செய்தி!...''
""என்னக்கா'' என்றாள் சிவகாமி.
""நானும் தங்கமணி ஐயாவும் சேர்ந்து வெளியூர்களுக்குச் செல்வதாக இருக்கிறோம்....எனவே கொஞ்ச காலத்துக்கு இந்த மாந்தோப்புக்கு உங்களைக் காண வர இயலாது....உங்களைப் பிரிவது எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது... இருந்தாலும் பல புதிய அனுபவங்களோடு உங்களை மீண்டும் சந்திக்க வருவேன்...
சரியா?...''
பிள்ளைகள் சோகமாகி விட்டனர். எனினும் திரும்ப வருவதாக ஞானம் சொன்னது அவர்களுக்கு ஆறுதலளித்தது!....
ஞானம் வானில் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போவதைப் பார்த்து சிறுவர்களும் சிறுமிகளும் கண்களில் தளும்பிய நீருடன் பார்த்துக்கொண்டே கைகளை அசைத்தனர்!
முற்றும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...