பாடுபட்டு செய்த செயல்கள்
பழுது பட்டுப் போவதால்
வாடி நின்று சேர்ந்து மனிதர்
வலிகள் என்று நோகுறார்
பறவையெல்லாம் கூடு கட்டும்...
....கூடும் காற்றின் வேகத்தில்
ஆடிக் கலைந்து வீழ்ந்த பின்னும்
அடுத்த முயற்சி எடுக்குமே!
உழைத்துக் களைத்த தேகம் என்று
ஓய்வு தேடும் மனிதரே....
....உதிக்கும் கதிர்கள் ஓய்வு என்று
ஒதுக்கும் நிலை இல்லையே!
எத்தனை நாள் மீண்டும் மீண்டும்
இந்த வேலை செய்வது
என்று மனது சலித்து தினம்
இயங்க மறுத்தல் சரியன்று!
கத்தும் கடல் அலைகள் சலித்து
கணமும் நிற்ப தில்லையே!
வெத்துப் பேச்சு பேச வேண்டாம்
விரைந்து செய்வோம் பணிகளை!
இயற்கை, சலிப்பு, ஓய்வு என்று
விடுப்பு எடுப்பதில்லையே!
நகைப்பினுக்கு இடம் தராமல்
நாளும் உழைத்து உயருவோம்!