விண்ணப்பம்!
தாத்தாவின் ஆதார் அட்டையில் இருக்கும் தொடர்பு எண்ணை மாற்றுவதற்காக அவரை அழைத்துக்கொண்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முதலில் அப்பாதான் தயாராக இருந்தார்.


தாத்தாவின் ஆதார் அட்டையில் இருக்கும் தொடர்பு எண்ணை மாற்றுவதற்காக அவரை அழைத்துக்கொண்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முதலில் அப்பாதான் தயாராக இருந்தார்.
ஆனால் அன்று அதிகாலையில் தன்னுடன் பேரன் அகிலனை மட்டும் அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூறிவிட்டார் தாத்தா.
அப்பாவிற்கும் இது சரியென்று தோன்றியது. கோடை விடுமுறையில் இது போன்ற அரசு அலுவலகங்களுக்குச் செல்வது அவனுக்குப் பயனுள்ள அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் அப்பா நம்பினார்.
தன் பேரன் அகிலனை அழைத்துப் போவதில் தாத்தாவுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி. பெரும்பாலும் அவன் வகுப்பின் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிடுவான். அதில் தாத்தாவுக்குப் பெருமைதான். இருந்தும் அகிலன், நன்றாகப் படிக்கவேண்டும் என்பதில் கொண்ட அக்கறையைப்போல் சில நடைமுறைக்குத் தேவையான செயல்களில் கொண்டிருக்கவில்லை. அஞ்சல் அலுவலகம், வங்கி முதலிய இடங்களுக்குச் செல்வதை அவன் தவிர்த்துக்கொண்டே இருந்ததால்தான் இப்படிச் செய்தார்.
காலை பத்து முப்பதுக்கு இருவரும் அந்த அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தார்கள்.
தாத்தா அகிலனிடம், ""இப்போ....எங்கே போய் யாருகிட்டே என்ன கேக்கறது?'' என்றார்.
""இதுக்குத்தான் அப்பாவையை கூட்டிட்டு வந்திருக்கணும்.....எனக்கு என்ன தெரியும்?...'' என்று கோபித்துக் கொண்டான் அகிலன்.
தாத்தா சிரித்துக்கொண்டே அங்கே இருந்த யாரிடமாவது கேட்டு வருமாறு அவனைப் பணித்தார். அவனும் தயக்கத்துடன் சென்று சேவை மையத்திற்குப் போகும் திசையைத் தெரிந்துகொண்டு வந்தான்.
இருவரும் உள்ளே சென்று ஒரு அதிகாரியிடம் விசாரித்தார்கள்.
""நம்பர் மாத்தணும்னா விண்ணப்பம் வேணும்....அதுலே விரல் ரேகை வெச்சு ரெண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிக் கொண்டுவாங்க....படிவம் நிரப்பிக் கொடுத்தாலும் சரி...''என்றார் அந்த அதிகாரி.
இருவரும் ஒரு மரத்தடிக்குச் சென்றார்கள். தாத்தா படிவம் நிரப்புவதைத் தவிர்க்க அதைப் பற்றி அகிலனிடம் எதுவும் சொல்லவில்லை.
""அகில்,...நீதான் நல்லா படிக்கிற பையனாச்சே!.....ஏதோ விண்ணப்பம் வேணும்னு சொன்னாங்களே அதைக் கொஞ்சம் எழுதிக் கொடுப்பா!...'' என்று உடன் கொண்டு வந்த வெற்றுத்தாளையும், பேனாவையும் கொடுத்தார்.
அகிலனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பெறுநர் முகவரி கூட அவனுக்குக் குழப்பமாக இருந்தது. கோபமும், பதட்டமும் பற்றிக்கொள்ள அழுதேவிட்டான்.
""தாத்தா!.....இனிமே அப்பாவையே கூட்டிட்டு வாங்க.... எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது.....நாங்க இதெல்லாம் படிச்சதே இல்லே....''
தாத்தா சிரித்துக் கொண்டே, ""இங்க பாரு அகில்!....பள்ளிக்கூடத்திலே நீ படிக்கிற பாடம் நடைமுறை வாழ்க்கையைச் சந்திக்கிறதுக்குத்தான்!....நீ படிச்சதை எல்லாம் எங்க எப்படிப் பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்க....நீ இப்படிப்பட்ட இடங்களுக்கு வரணும்....ஏன்னா, வாழ்க்கை முழுவதும் நாம் இந்த மாதிரி அலுவலகங்களுக்கு வந்துகொண்டேதான் இருப்போம்...''
தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டவனாய், புதிய புரிதலோடு தாத்தா சொல்லச் சொல்ல அந்த விண்ணப்பத்தை மகிழ்ச்சியுடன் எழுதத் தொடங்கினான் அகிலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...