கதைப் பாடல்!: போட்டியும் பொறாமையும்!
மாதவன் வகுப்பில் பாடத்தில்மனத்தைச் செலுத்திப் படித்திடுவான்!நாதன், தான்பார்த்த தொலைக்காட்சி


மாதவன் வகுப்பில் பாடத்தில்
மனத்தைச் செலுத்திப் படித்திடுவான்!
நாதன், தான்பார்த்த தொலைக்காட்சி
நாடகம் பற்றிப் பேசிடுவான்!
அதனால் தேர்வில் மாதவனே
அதிக மதிப்பெண் எடுத்து வந்தான்!
அதனைப் பார்த்துப் பொறாமையினால்
அவன் மேல் வெறுப்பு நாதனுக்கு!
மாதவனோடு பேசமாட்டான்!
மறைமுகப் பேச்சால் வருத்திடுவான்!
வீதியில் நடந்தே போனாலும்
விலகிப் போவான் அவன் தனியே!
அன்று நடந்தது இடைத்தேர்வு
அதிர்ந்து போனான் நாதனுமே!- அவனிடம்
தங்கை வாங்கிய பேனாவை
தந்திடவில்லை திருப்பி அவள்! - நாதனும்
திருப்பிக் கேட்க மறந்திட்டான்!
தேர்வை எப்படி எழுதுவது?...
திரண்டே கண்ணீர் கொட்டியது!
ஆசிரியர் இதனைக் கேட்டறிந்தார்!
""இரண்டு பேனா வைத்திருப்போர்
இரவல் கொடுத்தே உதவிடுங்கள்!...''
பரிந்தே உரைத்தார் ஆசிரியர்
பலரும் சொல்லினர் இல்லையென்றே!...
எழுந்தான் மாதவன்,....""என்னிடத்தில்
இருக்கிறது!...'' என்றே கொடுத்திட்டான்!
அழுதவன் முகத்தில் மகிழ்ச்சியுடன்
அதனை வாங்கி எழுதிட்டான்!
பதிலை எழுதிக் கொடுத்துவிட்டு
படியில் இறங்கிய மாதவனை
எதிரில் வந்த நாதனுமே
இருகரம் பற்றிக் கண்கலங்கி,....
""அன்பு நண்ப!....என்னைவிட
அதிக மதிப்பெண் வாங்கிவரும்
உன்மேல் கொண்ட பொறாமையினால்
உன் மனம் வருந்திடப் பேசிவிட்டேன்!....
என்றன் தவறை உணர்ந்துவிட்டேன்!
என்னை நீயும் மன்னிக்கணும்!''
என்றதைக் கேட்ட மாதவனும்,....
""இனிய நண்ப!....படிப்பினிலே
போட்டி இருக்கலாம்!....மனத்தினிலே
பொறாமை இருந்திடக் கூடாது!
ஊக்கம் இருந்தால் என்னிலும் நீ
உயர்ந்த மதிப்பெண் பெற்றிடலாம்!''
இதமாய் சொன்னதை நாதனுமே
ஏற்றே படித்தான் தேர்வினிலே
மதிப்பெண் நூற்றுக்கு நூறெடுத்தே
மகிழ்ந்தே சிரித்தனர் இருவருமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...